240 கிமீ வேகத்தில் பல்டியடித்து சுக்குநூறான மெக்லாரன் கார்... ஓட்டிய முதியவர் உயிர் தப்பினார்!
ஜெர்மனியிலுள்ள ஆட்டோபான் சாலையில் அதிவேகத்தில் சென்ற மெக்லாரன் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி பல்டியடித்தது.
இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 71 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதிவேகம்
ஜெர்மனியின் ஆட்டோபான் ஏ95 விரைவு சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்தபோது அந்த மெக்லாரன் 12சி கார் மணிக்கு 240 கிமீ வேகத்தில் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அப்பளம் போல் நொறுங்கிய கார்
இந்த பயங்கர விபத்தில் பல முறை பல்டியடித்த அந்த கார் சாலை தடுப்புகளில் மோதியதால், உருக்குலைந்து அப்பளம் போல் நொறுங்கியது. அந்த காரை குப்பை கூளம் போல் போலீசார் டிரக்கில் அள்ளி சென்றனர்.

அரை கீமீ.,க்கு சாலை சேதம்
மெக்லாரன் கார் விபத்தால் ஆட்டோபான் ஏ95 சாலையில் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்துக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாம். அந்த அளவுக்கு கோரமான விபத்தாக நடந்துள்ளது. 26 இடங்களில் அந்த சாலையில் கடுமையாக சேதங்கள் ஏற்பட்டுள்ளனவாம்.

ஓட்டிய முதியவர் பத்திரம்
மெக்லாரன் காரின் வலிமையான கார்பன் ஃபைபர் மோனோசெல் என்ற காரின் உடல் கூடுதான், ஓட்டியவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்தளவுக்கு மோசமான விபத்திலும், ஓட்டியவர் உயிர் தப்பியிருப்பது காரின் வலுவான கட்டமைப்பால்தான் என்று காரணம் சொல்கின்றனர். மேலும், ஆட்டோபான் சாலையின் தடுப்பும் ஓட்டியவரின் உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

தேறாது
இந்த கார் முற்றிலும் சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பைசாவுக்கு பிரயோஜனமில்லாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆட்டோபான் நெடுஞ்சாலை
Source: Bild


Click it and Unblock the Notifications