வயது வெறும் நம்பர் தான்... 73 வயதில் செய்கிற காரியமா இதெல்லாம்? கை தட்டி பாராட்டும் ஆனந்த் மஹிந்திரா!!
கேரளாவை சேர்ந்த 73 வயதான பாட்டி சுமார் 11 ஒட்டுனர் உரிமங்களை வைத்துள்ளார் என்றால், நம்ப முடிகிறதா? இதே ஷாக்கிங் தான் மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கும். அந்த ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியில் ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அவரை கவரும் விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதை எப்போதும் விரும்ப கூடியவர். இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை பற்றி இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். குறிப்பாக ஆட்டோமொபைல் தொடர்பான புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் தொழிற்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளை அதிகளவில் ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பதிவில் காணலாம்.

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை போன்று எக்ஸ் தளத்தை (முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்டது) அதிகமாக பயன்படுத்த விரும்பக்கூடியவர் ஆனந்த் மஹிந்திரா ஆவார். இந்த வகையில், ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பக்கத்தில், வாகனங்களை ஓட்டுவதில் அசத்தி வரும் 73 வயதான கேரள பாட்டி ராதாமணி அவர்களை பற்றிய பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சியில் ஏ-டூ-இசட் என்கிற பெயரில் ஒரு டிரைவிங் ஸ்கூல் இயங்கி வருகிறது. இதனை 1970ஆம் காலக்கட்டத்தில் துவங்கியவரின் மனைவி தான் இந்த 73 வயதான பாட்டி ராதாமணி அம்மா அவர்கள் ஆகும். டிரைவிங் ஸ்கூலை துவங்கியவர் கணவர் என்றாலும், அவர் 2004ஆம் ஆண்டில் விபத்தில் இறந்த பிறகு டிரைவிங் ஸ்கூலை ராதாமணி தான் கவனித்து வருகிறார்.
கணவர் உயிருடன் இருந்த சமயத்திலேயே ராதாமணி பல்வேறு வாகனங்களை ஓட்ட கற்று கொண்டுவிட்டார். திருமணமான புதியதில் மற்ற பெண்களை போல் ராதாமணி பாட்டிக்கும் வாகனங்களை ஓட்ட கொஞ்சம் பயம் இருந்துள்ளது. ஆனால், அதன்பின் அவரது கணவர் கொடுத்த தைரியத்தில் ராதாமணி வாகனங்களை ஓட்டி பார்க்க ஆரம்பித்துள்ளார்.
விரைவாகவே வாகனங்களை எளிதாக ஓட்ட ஆரம்பித்த ராதாமணி அவர்கள் 1988ஆம் ஆண்டில் பேருந்து மற்றும் லாரிக்கான அவரது முதல் டிரைவிங் லைசன்ஸை பெற்றார். அதன்பின், பைக், கார் உள்ளிட்டவற்றையும் ஓட்டிக் காட்டி லைசன்ஸை பெற்ற ராதாமணி, கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டில் சரக்கு பொருட்களை கையாளும் வாகனத்தை இயக்குவதற்கான டிரைவிங் லைசன்ஸையும் பெற்று அசத்தினார்.
ராதாமணி அவர்களிடம் தற்சமயம் 11 விதமான வாகனங்களை ஓட்டுவதற்கான டிரைவிங் லைசன்ஸ் உள்ளது. இந்தியாவிலேயே இத்தனை டிரைவிங் லைசன்ஸை கொண்டுள்ள பெண் இவர் மட்டுமே ஆவார். ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பதிவும் இதனை ஹைலைட் படுத்தியே உள்ளது. இந்த பதிவில், "வாழ்க்கையின் மீது தீராத பசி... அவரது (ராதாமணி) கால்தடத்தை விட்டு செல்ல ஆசை - அல்லது முடிந்தவரை பல பெடல்களில் கால் வைக்க வேண்டும். அவருக்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
கார்கள், கனரக வாகனங்கள், ஜேசிபி மற்றும் கிரேன்களை கூட ராதாமணி இயக்குவதற்கு அனுமதி உண்டு. அதாவது, இவரிடம் லைசன்ஸ் உள்ளது. இந்தியாவில், 2-வீலர்கள், கார்கள், எடை குறைவான மற்றும் எடை மிக்க சரக்கு வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பிரத்யேகமான ஸ்பெஷல் வாகனங்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒருவரை பாராட்டுகிறார் என்றால், பாராட்டை பெறும் நபரிடம் நிச்சயமாக திறமை உள்ளது என்றே அர்த்தம். கேரளாவின் ராதாமணி பாட்டியை பற்றி ஏற்கனவே சிலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், இவரிடத்தில் 11 விதமான டிரைவிங் லைசன்ஸ் இருக்கும் விஷயம் இப்போதுதான் நமக்கு தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications








