8 வயது சிறுவன் பைக் ஓட்டும் வீடியோ வைரல்... தந்தைக்கு கிடைத்த கடும் தண்டனை என்னவென்று தெரியுமா?
8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் பைக் ஓட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்பே பெரும்பாலான சிறார்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இங்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சிறார்களை இரு சக்கர வாகனங்களை ஓட்டியதால் கடந்த காலங்களில் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

எனவே சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இதற்கான அபராதம் 50 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களை 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கவும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அப்படி இருந்தும் கூட சிறார்கள் எவ்வித பயமும் இன்றி இரு சக்கர வாகனங்களில் வலம் வருவதை அடிக்கடி காண முடிகிறது. டூவீலர்கள் மட்டுமல்லாது கார் போன்ற வாகனங்களையும் கூட சில சிறார்கள் ஓட்டி வருகின்றனர். இந்த சூழலில் 8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவன் டூவீலரை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்காக அந்த சிறுவனின் தந்தைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவனின் தந்தைதான் பைக்கின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லக்னோ நகரில் உள்ள ககோரி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உரிய வயதை எட்டும் முன்பே பைக் ஓட்டிய அந்த சிறுவனின் உயரம் மிக குறைவாக உள்ளது. எனவே அவரது கால்கள் தரையை தொடவில்லை. அந்த சிறுவன் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் அவரது தலையுடன் ஒப்பிடும்போது அந்த ஹெல்மெட் மிகப்பெரியதாக இருந்தது. அத்துடன் ஹெல்மெட் சரியாகவும் அணியப்படவில்லை.

அந்த சிறுவன் ஓட்டிய பைக்கில், பால் கேன்கள் இருந்தன. எனவே அந்த சிறுவன் பாலை டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இப்பணியை அந்த சிறுவன் வழக்கமாக செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. ஏனெனில் அந்த சிறுவன் மிகவும் நம்பிக்கையுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டுகிறார்.
எனினும் இதுபோன்று சிறார்கள் வாகனங்களை ஓட்டுவது மிக அபாயகரமானது. சிறுவன் டூவீலரை ஓட்டும் நிகழ்வை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். இதன் பின் அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கி விட்டது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, அதன் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். இதில், அந்த பைக்கின் உரிமையாளர் கண்டறியப்பட்டார். அதன்பின்புதான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பைக்கின் உரிமையாளர் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

லக்னோ டிராபிக் போலீஸ் எஸ்பி புனேந்திரா சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலே குறிப்பிட்டதை போல், உரிய வயதை எட்டாமல் வாகனங்களை இயக்குவதற்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதற்கான அபராத தொகை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அத்துடன் தங்கள் குழந்தையை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக பெற்றோர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவேதான் இந்த சிறுவனின் தந்தைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்திற்காக பெற்றோர்களுக்கு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த சிறுவனின் தந்தைக்கு கோர்ட் சலானைதான் போலீசார் வழங்கியுள்ளனர். எனவே முறையான விசாரணை நடைபெறும். அதன்பின் இறுதி அபராத தொகை மற்றும் சிறை தண்டனை குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








