85 வயதில் வாங்காத காரே கிடையாது! ஆள் பார்த்தால் ரொம்ப சிம்பிளாக இருக்காரே... 60 கார்களுக்கு ஓனர்!!
பொதுவாகவே பணக்காரர்கள் புதியது, புதியதாக கார்களை வாங்கிக் கொண்டே இருப்பதை பார்க்க முடியும். புது, புது கார்களை வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலும், அவற்றை நிறுத்தும் அளவிற்கு இடவசதியை எவ்வாறு பெறுகிறார்கள்? என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்கு பதில் என்னவென்றால், பெரும்பாலான பணக்காரர்கள் தங்களது பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்தே புதிய காரை வாங்குகின்றனர். இந்த எக்ஸ்சேஞ்ச் முறையை பயன்படுத்தி கேரளாவில் முதியவர் ஒருவர் தனது 85வது வயதில் 60வது காரை வாங்கியுள்ளார். அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய வாகனங்களை பெற்றுக் கொள்வது புத்திசாலித்தனமான செயலாகும். இதன் மூலமாக, உங்களது பழைய காரை விற்க முடிவது மட்டுமின்றி, புதிய காரையும் குறைந்த செலவில் சொந்தமாக்க முடியும். இதன் மூலமாக, மார்க்கெட் டிரெண்ட்டுக்கு ஏற்ற மாடர்ன் கார்களை பயன்படுத்துகிறோம் என்கிற மன நிம்மதியையும் பெறலாம்.

அதுமட்டுமின்றி, சில கார் ஷோரூம் டீலர்கள் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக சில சலுகைகளையும் அவ்வப்போது வழங்குகின்றனர். இருப்பினும், வாழ்வில் 4, 5 கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார்களை பெறுவது நியாயம். ஆனால், இங்கு ஒருவர் எக்ஸ்சேஞ்ச் முறையை பின்பற்றி 60வது காரை தனது 85வது வயதில் டெலிவிரி பெற்றுள்ளார்.
கேரளா மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர் நாராயணன் பிள்ளை. இவர்தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிற ஹீரோ ஆவார். வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்றவரான நாராயணன் பிள்ளை தனது இளம் வயதில் இருந்தே கார்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். புத்தம் புதிய கார்கள் மீதான இவரது ஆர்வம் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆரம்பித்துள்ளது.

இளம் வயதில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நாராயணன் பிள்ளை, அங்கு தனது முதல் காராக ஆடி ஃபாக்ஸ் -ஐ வாங்கினார். பிரபலமான ஆடி 80 காரின் ரீபேட்ஜ்டு வெர்சனான ஆடி ஃபாக்ஸ் அந்த சமயத்தில் மிகவும் அட்வான்ஸான காராக இருந்தது. இது நாராயணன் பிள்ளையை கவர்ந்தது. பின்னர், இவரது வாழ்க்கை தரம் உயர ஆரம்பித்ததை அடுத்து, மேலும் புதிய கார்களை வாங்க ஆரம்பித்தார்.
அதன்பின், தனது பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார்களை வாங்க ஆரம்பித்தார். நாராயணன் பிள்ளையின் பழக்கம் என்னவென்றால், எந்தவொரு காரையும் அவர் நீண்ட வருடங்களுக்கு பயன்படுத்துவதில்லை. அதிகப்பட்சமாக 1 அல்லது 2 வருடங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். அதன்பின், அந்த கார் அவருக்கு பழையதாக தெரிய ஆரம்பித்துவிடுகிறது. இதனால், அதனை கொடுத்து புதிய ஒன்றை வாங்குகிறார்.

அந்த வகையில் தற்போது நாராயணன் பிள்ளை வாங்கியிருப்பது பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் ஆகும். கருப்பு நிறத்தில் இந்த பிஎம்டபிள்யூ காரை இவர் ஷோரூம் ஒன்றில் டெலிவிரி பெறும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரின் 220ஐ என்கிற பெட்ரோல் வேரியண்ட்டை நாராயணன் பிள்ளை தற்போது வாங்கியுள்ளார்.
அதாவது, இந்த காரில் 2.0 லிட்டர் ட்வின் பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 189 பிஎச்பி மற்றும் 280 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜினின் இயக்க ஆற்றல் காரின் முன் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டிவிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை வருட காலக்கட்டத்தில் 60 கார்களை வாங்கியவருக்கு இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. எப்போதும் புது, புது விஷயங்களை எதிர்பார்ப்பதில் உள்ள பிரச்சனையே இதுதான்... அடுத்தடுத்து என மாறிக் கொண்டே இருக்கும்போது உங்களுக்கு பிடித்த ஸ்பெஷலான ஒன்றை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கும். நாராயணன் பிள்ளையிடமும் நீங்கள் வாங்கிய 60 கார்களில் உங்களது ஃபேவரட் எது என கேட்டுப் பாருங்கள்... குறைந்தது 10 கார்களை சொல்வார். ஏனெனில், எந்த காருடனும் அவருக்கு நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டிருக்காது.


Click it and Unblock the Notifications









