மோடியை வெச்சு செஞ்ச தெலங்கானா இளைஞர்... தமிழ்நாடு பாய்ஸ் நோட் பண்ணுங்கப்பா...
பெட்ரோல் விலை குறைப்பால் மிச்சம் பிடிக்கப்பட்ட 9 பைசாவை, பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி, காமெடி செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.
பெட்ரோல் விலை குறைப்பால் மிச்சம் பிடிக்கப்பட்ட 9 பைசாவை, பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி, காமெடி செய்துள்ளார் இளைஞர் ஒருவர். பெட்ரோல் விலை உயர்வின் ஒரு பகுதியாக, அடேங்கப்பா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே என்பது போல், அரங்கேறியுள்ள இளைஞரின் அந்த செயல், நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இதுபற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படாது என்ற எழுதப்படாத ஒரு விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும் மத்திய அரசுக்கு ஒரு சபாஷ் போடும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதி வரை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவே இல்லை. என்ன ஒரு அதிசயம் என மக்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் அந்த சமயத்தில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால்தான், விலை உயர்த்தப்படவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

எனவே தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் விலை உயர்த்தப்படும் என பலர் பரவலாக பேச தொடங்கினர். அதை மத்திய பாஜக அரசும் நிரூபித்து விட்டது. தேர்தல் நடைபெற்று முடிந்ததுதான் தாமதம். வழக்கம்போல வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. ஆம், பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு கொண்டே வந்தது.

ஒன்றல்ல...இரண்டல்ல...தொடர்ச்சியாக 16 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்று, இறுதியில் புதிய உச்சத்தையே தொட்டு விட்டது. மக்கள் வெறுத்தே போய்விட்டனர். அப்படி கோவத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களை சாந்தப்படுத்த வேண்டும் அல்லவா? எனவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் குறைக்க தொடங்கின.

அந்த நற்செய்தி கடந்த மே 30ம் தேதி மக்களின் காதுகளை வந்தடைந்தது. ஆம், மே 30ம் தேதி முதல் இன்று (ஜூன் 6ம் தேதி) வரை தொடர்ச்சியாக 8 நாட்கள் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டு வருகிறது.நல்ல விஷயம்தானே என உடனே சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று விட வேண்டாம்.

வெறும் ஓரிரு பைசா கணக்கில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. விலையை உயர்த்துவது ரூபாய் கணக்கில் என்றாலும், குறைப்பது என்னவோ பைசா கணக்கில்தான். மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அப்படி ஒரு அக்கறை!!!

சென்னையில் கடந்த மே 30ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.80 ரூபாயாக இருந்தது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.68 ரூபாய். ஆக வெறும் எட்டே நாட்களில் 12 பைசா என்ற மாபெரும் விலை குறைப்பு நடைபெற்றிருக்கிறது!!!

அதாவது தினசரி பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது என்ற செய்திகள் மட்டுமே வெளியாகும். வெறுமனே அடடா பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு விட்டது என நம்பி விட்டால் அவ்வளவுதான். செய்தியை உள்ளார்ந்து படித்து பார்த்தால், கண் துடைப்புக்காக நடைபெறும் விலை குறைப்பு என்ற மத்திய அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில் தெலங்கானா மாநிலத்தில், பெட்ரோலின் விலை சமீபத்தில், வரலாறு காணாத வகையில், 9 பைசா குறைக்கப்பட்டது!!! இதனால் மக்களுக்கு 9 பைசா மிச்சம் ஆனது!!! இந்த மாபெரும் விலை குறைப்பை செய்த பிரதமர் மோடியை, நூதன முறையில் கிண்டல் அடித்துள்ளார் அம்மாநிலத்தை சேர்ந்த ஓர் இளைஞர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரையா. பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால், சந்திரையாவுக்கு 9 பைசா மிச்சம் ஆனது. இதனால் உச்சி குளிர்ந்து போன சந்திரையா, அந்த 9 பைசாவையும் தானே வைத்து கொள்ள ஆசைப்படவில்லை.

பிரஜா வாணி என்ற ஒரு திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது, நேராக அம்மாவட்ட கலெக்டர் கிருஷ்ண பாஸ்கரிடம் சென்றார் சந்திரையா. உடன் 9 பைசாவுக்கான காசோலை ஒன்றையும் எடுத்து சென்றார்.

''ஐயா, பெட்ரோல் விலை குறைப்பால் நான் 9 பைசாவை சேமித்துள்ளேன். இதனை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். நான் வழங்கும் இந்த நன்கொடை, ஓர் நல்ல காரியத்துக்கு பயன்படும் என நம்புகிறேன். எனவே இதை எப்படியாவது பிரதமரிடம் சேர்த்து விடுங்கள்'' என கூறி கலெக்டரை திக்குமுக்காட வைத்தார் சந்திரையா.

அந்த சமயத்தில் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு, தர்ம சங்கடத்தில் நெளிந்தார் ஐஏஎஸ் அதிகாரியான கிருஷ்ண பாஸ்கர். இருந்தாலும், உங்கள் உத்தரவு. அப்படியே ஆகட்டும் என சொல்லி, சந்திரையாவை அனுப்பி வைத்தார்.

இந்த நூதன சம்பவம் நாடு முழுவதும் சிரிப்பலையுடன், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக 'பிரதமர் மோடியை வெச்சு செய்யும்' பழக்கம் தமிழ்நாட்டு இளைஞர்களிடம்தான் அதிகமாக காணப்படும். தற்போது அந்த பழக்கம் தெலங்கானாவிலும் தொற்றிக்கொண்டது போல. அவர்களும் 'வெச்சு செய்ய' தொடங்கியுள்ளனர்.

இதனிடையே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் அதன் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னும் தீவிரப்படுத்தியதாக தெரியவில்லை. அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Source: 14


Click it and Unblock the Notifications