அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய போலீஸார்: இரண்டு நாளில் 940 பேர் மீது வழக்கு பதிவு — அதிர்ச்சி தகவல்
போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் வெறும் இரண்டு நாளில் 940 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொள்வதில் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் போலீஸார் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனை உறுதி செய்யும்வகையில் அண்மைக் காலங்களாக வெளியாகிய செய்திகள் இருக்கின்றன.

அந்தவகையில், அண்மையில்கூட, அந்நகரத்தின் மாநகராட்சி ஆணையருடைய கார் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி டுவிட்டரில் உலா வந்த புகைப்படத்தைக் காட்டி, ஹைதராபாத் நகர போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்திருந்தனர்.
இவ்வாறு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர்களாக அவர்கள் மாறி வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் ஓர் அதிரடி நடவடிக்கையை முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சீரற்று மற்றும் சேதமடைந்து காணப்படும் நம்பர் பிளேட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 940 பேர் மீது, அடையாளம் காணமுடியாத மற்றும் சேதப்பட்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்துடன், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை இயக்க குற்றத்திற்காக 363 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு, ஒழுங்கற்ற நம்பர் பிளேட்டுகளை வைத்து வாகனங்களை இயக்கியவர்கள்மீது குற்ற வழக்காக ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, மோட்டார் வாகன விதிமீறலுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கு எதிராக குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நகரத்தின் போக்குவரத்துதுறை காவல் அதிகாரியான கேவிபி ராஜு கூறியதாவது, "பல வாகன ஓட்டிகள் முறையற்ற நம்பர் பிளேட்டுகளைக் கொண்டும், பாதிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகளைக் கொண்டும் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதிலும், சிலர் போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குகின்றனர். இதுபோன்ற, குற்றங்களைத் தவிர்க்கும் முயற்சியாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.

இந்த நடவடிக்கையில், நாள் ஒன்றிற்கு 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், இதுபோன்ற குற்றங்களைத் தவிர்க்கும் விதமாக, வாகன ஓட்டிகளுக்கு அபராதச் செல்லாண் வழங்குவதற்கு பதிலாக, அவர்கள்மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், நம்பர் பிளேட் சார்ந்து நடைபெறும் குற்றங்கள் கணிசமாக குறையும் என கூறப்படுகின்றது.

கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அதிகபட்சமாக இளைஞர்களே சிக்கியுள்ளனர். மேலும், நம்பர் பிளேட் தவிர, வாகனம்குறித்த ஆவணம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் ஆய்வு மேய்வுகொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்ற நடவடிக்கைகளை, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக ஹைதராபாத் போலீஸார் சில மாதங்களாகவே மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடிவடிக்கையின் காரணமாக, அந்நகரத்தில் அரங்கேறி வந்த குற்றச் சம்பவங்கள் கணிசமாக குறைந்ததாகக் கூறப்படுகின்றது.

அதேசமயம், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கேமிரா மற்றும் போலீஸார்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலும், சிசிடிவி கேமிராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை வைத்தே வாகன ஓட்டிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, பல முறைகேடாக வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு, அவர்களின் வீட்டிற்கே அபராதச் செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்காரணமாக, பல வாகன ஓட்டிகள் சிசிடிவி கேமிராவின் கண்களில் சிக்காத விதமாக அவர்களின் நம்பர் பிளேட்டினை, அவர்களே சேதப்படுத்தி இயக்கி வந்துள்ளனர். இதையறிந்த போலீஸார், வாகன சோதனையின்போது, ஆவணங்களைப் பரிசோதிப்பதுடன், நம்பர் பிளேட் குறித்த ஆய்வினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு, எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, கடந்த இரண்டு தினங்களில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். மேலும், இந்த அதிரடி வேட்டையின்மூலம் இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என கூறப்படுகின்றது.

ஹைதராபாத் அண்மைக் காலங்களாக, அதிகப்படியான வாகன விபத்துகளின் காரணமாக பெரும் தலை வலியைச் சந்தித்து வருகின்றது. அதிலும், கடந்த இரு ஆண்டுகளாக அது அதீத வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. இதில், பெரும்பாலும் கார்களே அதிகளவில் விபத்தில் சிக்கியுள்ளன. மேலும், இந்த விபத்துகளுக்கு காரணமாக அதிவேகம் மற்றும் ரேஷ் டிரைவிங் உள்ளிட்டவையே காரணமாக இருக்கின்றது.
ஆகையால், இவற்றைத் தவிர்க்கும் விதமாக ஹைதராபாத் போலீஸார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








