செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
செய்த வேலைக்கு பணம் (சம்பளம்) கொடுக்கவே யோசிக்கும் இந்த காலக்கட்டத்தில் ஓர் நபர் தன்னுடைய வீட்டில் பணி புரியும் சமையல்கார அம்மாவுக்கு சைக்கிளை வாங்கிக் கொடுத்து இருக்கின்றார். செய்தது என்னமோ சிறிய உதவிதான், ஆனால், இந்த உதவியால் அந்த பெண்ணும், அவருடைய குடும்பத்தினரும் மிகப் பெரிய மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
குடும்ப சூழல் காரணமாக இப்போது உள்ள இல்லத்தரசிகள் பலர் ஏதேனும் ஒரு தொழிலை செய்து தங்களால் இயன்ற உதவியை குடும்பத்திற்கு வழங்கி வருகின்றனர். இது போன்று பல பெண்கள் களமிறங்கி இருப்பதால் தற்போது தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் கோளோச்சி காணப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே தங்கள் வீட்டில் பணி புரியும் சமையல்கார பெண்ணை சப்போர்ட் செய்யும் விதமாக வீட்டின் உரிமையாளர் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கின்றார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நீரஜா, எனும் பெண் இவருக்கே சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
குடும்பத்தின் வறுமையான சூழல் காரணமாக தன்னுடைய ஏரியாவைச் சுற்றியுள்ள வீடுகள் சிலவற்றில் வீட்டு வேலை பார்த்து வருகின்றார், நீரஜா. மூன்று வீடுகளில் அவர் வேலை பார்ப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு தன் குடும்பத்தை அவர் பார்த்து வருகின்றார்.
ஆனால், இந்த வேலைக்கு வந்து செல்ல அவர் கால்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கின்றார். ஆமாங்க, நடந்தே அவர் அவருடைய வீட்டில் இருந்து வேலை செய்யும் வீடுகளுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்திருக்கின்றார். மேலும், நாள் ஒன்றிற்கு நடப்பதற்காக மட்டுமே அவர் 1.5 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை செலவிட்டு வந்திருக்கின்றார்.
குடும்ப சூழல் மற்றும் பெரிய அளவில் வருமானம் இல்லாத காரணத்தினால் அவர் பொது போக்குவரத்தையும் தவிர்த்து வந்திருக்கின்றார். அதுதவிர, போக்குவரத்துக்கு செலவு செய்யும் காசை மிச்சப்படுத்தினால் வீட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிற காரணத்திற்காகவும் அவர் பொது போக்குவரத்தைத் தவிர்த்திருக்கின்றார்.

இந்த நிலையியே நரேஷ், நீரஜாவுக்கு சைக்கிளை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் சைக்கிளே வேண்டாம் என அவர் மறுப்பு தெரிவித்தாகக் கூறப்படுகின்றது. சைக்கிள் ஓட்ட தெரியாது என்கிற காரணம் ஒருபக்கம் இருக்க, அதற்காக காசை செலவிடவும் தயங்கி இருக்கின்றார். இந்த மாதிரியான சூழலிலேயே நரேஷ் பாதி தொகையையும், நீராஜ பாதி தொகையையும் செலுத்தி சைக்கிளை வாங்கி இருக்கின்றனர்.
நரேஷ் இடம் இலவசமாக சைக்கிளை வாங்க நீரஜா மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இருவரும் பாதி பாதி தொகையைப் போட்டு சைக்கிளை வாங்கி இருக்கின்றனர். தற்போது இந்த சைக்கிளிலேயே நீரஜா தன்னுடைய பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். ஆமாங்க, சைக்கிளை நன்கு ஓட்ட கற்று தேர்ந்திருக்கின்றார், நீரஜா.
மேலும், முன்பு ஒரு இடத்திற்கு செல்ல அவருக்கு 25 நிமிடங்கள் ஆன நிலையில் தற்போது அவர் வெறும் 5-7 நிமிடங்களிலேயே சென்றுக் கொண்டிருக்கின்றார். ஆகையால், வேலைக்கும் சரியான நேரத்தில் சென்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இது குறித்த தகவலையே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நரேஷ் சந்தோஷப்பட்டிருக்கின்றார்.
நரேஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமா வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நீரஜா மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டுவதை பார்த்து பலர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தங்களின் மனதை வருடச் செய்திருப்பதாக இணையவாசிகள் பலர் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நரேஷ் செய்திருப்பது சிறிய உதவியாக இருந்தாலும், இதனால் நீரஜா அடைய இருக்கும் பலன் மிகப் பெரியதாகும். சீக்கிரமே வேலைக்கு வருவது மட்டுமல்ல, வீட்டிற்கும் சென்று சேர முடியும். மேலும், வேலை பலுவுடன் நடக்கும் சிரமத்தையும் தினசரி சந்தித்து வந்த நீரஜாவுக்கு தற்போது நடப்பதில் இருந்து ஓய்வு கிடைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








