திரைப்படங்களை பார்த்து கார்களை திருடிய கொள்ளையன்! கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததால் சிக்கினார்
திரைப்படங்களை பார்த்து கார்களை கொள்ளையடிக்க தொடங்கிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த அந்த கொள்ளையன், கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததால் சிக்கினார்.
திரைப்படங்களை பார்த்து கார்களை கொள்ளையடிக்க தொடங்கிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். பல மாதங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த அந்த கொள்ளையன், கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததால், சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் கார்களில் பாதுகாப்பிற்காக, ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தி கொள்வது அவசியமானது. இன்றைய கால கட்டத்தில் வெளிவரும் ஜிபிஎஸ் டிவைஸ்கள், வேகத்தை மானிட்டர் செய்வது உள்பட பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.

எனினும் கார் எங்கே உள்ளது? என்ற ரியல் டைம் டேட்டாவை வழங்குவதே, ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பயன்பாடு. உங்கள் நண்பர்கள் அல்லது குழந்தைகள் காரை ஓட்டி சென்றால், அவர்கள் எங்கே உள்ளனர்? என்பதை ஜிபிஎஸ் டிவைஸ் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ஒருவேளை கார் திருடுபோனாலும் கூட, அதனை கண்டறிவதற்கு ஜிபிஎஸ் டிவைஸ் உதவிகரமாக இருக்கும். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒருவர், திருடுபோன தனது காரை, ஜிபிஎஸ் டிவைஸ் மூலமாக ட்ரேஸ் செய்து கண்டறிந்த சம்பவம், சமீபத்தில் நடந்துள்ளது.

கார் மீட்கப்பட்டதுடன், காரை திருடிய பிரபல கொள்ளையனையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜிபிஎஸ் டிவைஸ் உதவியால்தான், இதனை செய்ய முடிந்தது. அந்த கார் கொள்ளையன், போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் பகுதியை சேர்ந்த, ரேவன் சொனாட்கே என்ற இளைஞர்தான், போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர். இவருக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மற்றும் சாங்லி உள்ளிட்ட பகுதிகளில் பல கார்களை ரேவன் சொனாட்கே திருடியுள்ளார்.

பிரபல கொள்ளையனான ரேவன் சொனாட்கேவிடம் இருந்து 2 எஸ்யூவி கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்பட்ட காரும், போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களில் வரும் கார் கொள்ளை காட்சிகளை எல்லாம் ரேவன் சொனாட்கே விரும்பி பார்ப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதன்மூலம்தான் கார்களை கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆசையே அவருக்குள் எழுந்ததாம்!

கார்களை எப்படி கொள்ளையடிக்க வேண்டும்? என படங்களை பார்த்து கற்றுக்கொண்ட பார்முலாவை அப்படியே அப்ளை செய்து, கார்களை திருட தொடங்கியுள்ளார் ரேவன் சொனாட்கே. கோலாப்பூரில் உள்ள ஒரு கேரேஜில் இருந்து மஹிந்திரா ஸ்கார்பியோ காரை, கடந்தாண்டு அவர் திருடியதாக கூறப்படுகிறது.

இதுதவிர சாங்லி பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு எஸ்யூவி காரை, கடந்த ஜூலை 5ம் தேதி கொள்ளையடித்ததாகவும், ரேவன் சொனாட்கே மீது புகார் உள்ளது. இந்த 2 எஸ்யூவி கார்களையும்தான் தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சூழலில்தான் கோலாப்பூர் பகுதியில் இருந்து, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி ஒரு காரை திருடியுள்ளார் ரேவன் சொனாட்கே. ஆனால் என்ன செய்வது பாவம். ரேவன் சொனாட்கே லேட்டஸ்ட்டாக திருடிய காரில், ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்பட்டிருந்தது.

இதன்மூலம் காரை பறிகொடுத்த அதன் உரிமையாளர், ரேவன் சொனாட்கேவின் லொக்கேஷனை ட்ரேஸ் செய்து விட்டார். முகம்மத்வாடி என்ற பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணன் நகர் என்ற இடத்தில், கார் இருப்பதை ஜிபிஎஸ் டிவைஸ் காட்டி கொடுத்தது. தனது மாமாவை சந்திப்பதற்காக, ரேவன் சொனாட்கே அங்கு சென்றிருந்தார்.

உடனடியாக அந்த காரின் உரிமையாளர், போலீசாரை அலர்ட் செய்தார். இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் போலீசார் வரும் தகவல், ரேவன் சொனாட்கேவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இதனால் காரை அங்கேயே விட்டுவிட்டு, ரேவன் சொனாட்கே தப்பியோடி விட்டார்.

இதனால் காரை மட்டும் போலீசார் முதலில் பறிமுதல் செய்தனர். பின்னர் ரேவன் சொனாட்கேவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ரேவன் சொனாட்கேவை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார், ஒருவழியாக தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

தான் திருடிய கார் ஒன்றில் பயணித்து கொண்டிருக்கும்போதுதான், போலீசாரின் கைகளில் ரேவன் சொனாட்கே வசமாக சிக்கினார். பல மாதங்களாக போலீசாரின் கண்ணில் மண்னை தூவி தப்பித்து கொண்டிருந்த ரேவன் சொனாட்கே பிடிபட, ஜிபிஎஸ் டிவைஸே முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.

எனவே கார் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் கார்களில் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தி கொள்வது சிறந்தது. குறைவான விலையில், தரமான ஜிபிஎஸ் டிவைஸ்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கார் உரிமையாளர்கள் அதனை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications