இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை கட்டாயம்... மத்திய அமைச்சர் தகவல்... எது எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா?
இனி ஆதார் அட்டை இதற்கெல்லாம் கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டாலும், அரசின் சில குறிப்பிட்ட சலுகைகளைப் பெற இந்த கார்டு கட்டாயம் என்ற நிலையே நீடித்து வருகின்றது. குறிப்பாக, அரசின் மானியம் மற்றும் பிற சில சேவைகளைப் பெறுவதற்கு இந்த கார்டு கட்டாயம் என்ற நிலை இருந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், துறை சார்ந்திருக்கும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவித்துள்ளது. நேரடி தொடர்பின்றி ஆன்லைன் வாயிலாக சேவையை நுகரும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

ஆகையால், ஆர்டிஓ போன்ற இத்துறைசார்ந்து இயங்கும் ஆன்லைன் சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாகியுள்ளது. 16 விதமான சேவைகளை நேரடி தொடர்பில்லாமல் ஆன்லைன் தளத்தின் வாயிலாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வழங்கி வருகின்றது.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், முகவரி மாற்றுதல், பதிவு சான்று மற்றும் கற்போர் உரிமம் (learner's licence) பெறுதல் என பல்வேறு சேவைகளை நேரடி தொடர்பில்லாமல் ஆன்லைன் வாயிலாகவே, பரிசீலித்து வழங்கி வருகின்றது மத்திய போக்குவரத்துத்துறை.

இந்த சேவைகளுக்கே அமைச்சகம் ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கின்றது. முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இதுதவிர, ஆன்லைன் சேவையை துரிதப்படுத்தும் நோக்கிலும் இதனைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஆதார் அட்டை இல்லாதோர், ஆதார் அட்டையைச் சமர்பிக்க வேண்டாம் என நினைப்போர், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று சேவையைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆதார் கட்டாயம் என கேட்கப்படாது.

ஆன்லைன் வாயிலாக அரசின் இணைய வழி சேவையைப் பயன்படுத்துவோர் பலர் முறைகேடான மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே அமைச்சகம் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








