ஹோட்டலுக்கு வெளியே ஆதரவற்று அனாதையாக கிடக்கும் பல கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! பில் கட்டாம இருந்திருப்பாரோ!
விலை உயர்ந்த வாகனங்கள் கேட்பாரற்று கிடப்பதைப் பார்க்கும்போது ஏற்படக் கூடிய மன வருத்தத்தை நம்மால் அவ்வளவு எளிதில் விவரிக்க முடியாது. அதிலும், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) போன்ற பெரும் நிறுவனங்களின் தயாரிப்பை சாலையோரத்தில் அனாதையாக இருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சு வலிகூட வர வாய்ப்பு இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலை இந்தியாவில் பெரிய அளவில் பார்க்க முடியாது. இருந்தாலும் நாட்டின் ஏதேனும் ஓர் மூலையில் கை விடப்பட்ட அரிய வகை கார்கள் துருவிற்கும், தூசிக்கும் இரையாகிக் கொண்டிருப்பதை நம்மால் இணையத்தின் வாயிலாகக் காண முடிகின்றது. அந்தவகையிலேயே ஒட்டுமொத்த கார் ஆர்வலர்களையும் அதிர செய்யும் வகையில் ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய தலைமுறை ரோல்ஸ்-ராஸ்ய் பாந்தம்VII சொகுசு கார் கை விடப்பட்ட சம்பவம் பற்றிய தகவலே தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. இந்த காரை அதன் உரிமையாளர் கைவிட்டதற்கு பின்னால் மிகப் பெரிய கதை உள்ளது. அந்த கதை என்ன? இந்த அரிய சொகுசு காரின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இங்கு காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆள் ஆதரவற்றுக் கிடக்கும் இந்த சொகுசு கார் ரோஸ் வேலி குழுமத்தின் உரிமையாளரான கவுதம் குண்டு என்பவருக்கு சொந்தமானது ஆகும். மிகப் பெரிய நிதி மோசடியில் இந்த நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் இதன் காரணத்தினால் மிகப் பெரிய சரிவை இந்த நிறுவனம் சந்தித்தது.

17 ஆயிரம் கோடி ரூபாயை கவுதம் குண்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகின்றது. போலியான மற்றும் பொய் திட்டங்கள் வாயிலாக மக்களிடமிருந்து இவர்கள் பல கோடி ரூபாய்களைச் சுருட்டி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த நிலையிலேயே அமலாக்கத் துறை கவுதம் குண்டுவின் 1117.71 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது.
இந்த நிலையிலேயே அவருக்கு சொந்தமானது என கூறி இணையத்தில் பழைய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. சோகம் என்னவென்றால் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி அந்த கார் இருக்கின்றது. காரின் மேல் தூசி படர்ந்துக் காணப்படுகின்றது. அத்துடன், சஸ்பென்ஷன்களும் சேதமடைந்துக் காணப்படுகின்றது.
இதுதவிர வேறு எந்த பிரச்னையும் அந்த காரில் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், அந்த கார் இன்னும் பல மாதங்களுக்கு இதுபோன்று கேட்பாரற்றும், கவனிப்பும் இன்றி இருக்கும் என்றால் இதைவிட மிக மோசமான நிலைக்கு இந்த கார் ஆளகக் கூடும். ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII உலகின் மிகவும் பிரமாண்டமான கார்களில் ஒன்றாக அறியப்படுகின்றது.
மேலும், நிறுவனத்தின் முதன்மையான சொகுசு கார் தயாரிப்பாகவும் இந்த கார் மாடல் பார்க்கப்படுகின்றது. இத்தகைய கார் மாடலை அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VII, சொகுசு காரில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 460 பிஎஸ் மற்றும் 720 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இந்த காரில் வழங்கப்ப்டடு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்கள் கைவிடப்படுவது அரிதினும் அரிதாகவே அரங்கேறுகின்றது. விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி போன்ற மோசடி மன்னன்களே இதுபோன்ற கார்களை சில நேரங்களில் கைவிட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடுகின்றனர். மேலும், இதுமாதிரியானோர் கைவிடும் அரிய வகை கார்களை அதிகபட்சம் விமான நிலையங்களிலேயே பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








