வாகன துறையின் மீது அப்துல் கலாமின் கனவுகளும், ஆசைகளும்...!!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏவுகணை திட்டங்களின் வெற்றிக்கு சூத்திரதாரியாக விளங்கினார். அவர் எதிர்காலத்தை பற்றி கண்ட கனவுகளைவிட, அதனை அடைவதற்கான இடர்பாடுகளுக்கு தீர்வு காண்பதிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்.
அந்த வகையில், மரபுவழி எரிபொருள்களின் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழலை காத்திட அதற்கான மாற்று எரிபொருளை கண்டறிவதற்கான முயற்சிகள் பற்றியும் அவர் ஆட்டோமொபைல் துறையினருக்கும், பொறியாளர்களுக்கும் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

01. எதிரான நிலைப்பாடு
2012ம் ஆண்டு சென்னையில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து பேசிய அப்துல்கலாம், ஆட்டோமொபைல் துறையினருக்கு சில கருத்துக்களை முன் வைத்தார். அப்போது, தனது பேச்சை துவங்கும்போதே, "நான் மரபு வழி எரிபொருளுக்கு எதிரானவன்," என்று பேசினார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தனது தொலைநோக்கு பார்வையை அதன் மூலம் பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து, அவர் முன் வைத்த சில கருத்துக்கள் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்துக்கு மிகுந்த பயனுள்ளவையாக இருந்தன. அவற்றை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.

02. கலப்பு உலோகம்
ஏவுகணைகளில் பயன்படுத்துவதற்கான கலப்பு உலோக தயாரிப்பு முறைகளில் அவருக்கு நல்ல ஞானம் உண்டு. அதனை வைத்து போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் கால்களில் பொருத்துவதற்கான காலிபர் ஷூ எனும் காலணியை தயாரித்ததை அவர் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக தெரிவித்தார். அதேபோன்று, வாகன கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு துறையில் புதிய பொருட்கள் அல்லது கலப்பு உலோகங்களை கொண்டு தயாரிப்பதற்கான முயற்சிகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

03. மாற்று எரிபொருள் நுட்பங்கள்
இன்னும் 50 முதல் 100 ஆண்டுகள் வரையில் மட்டுமே மரபுசார் எரிபொருள்கள் கிடைக்கும். எனவே, புதிய தொழில்நுட்பங்களையும், மாற்று எரிபொருளில் இயங்கும் வாகன நுட்பங்களையும் கண்டறிவது அவசியம். அதுவும் அவற்றுக்கான முயற்சிகளை விரைந்து செய்ய வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

03. உயிரி எரிபொருள்
நடப்பு தசாப்த காலத்திற்குள் அனைத்து வாகனங்களும் 100 சதவீதம் உயிரி எரிபொருளில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை இப்போதே அரசாங்கம் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று கூறியிருக்கிறார்.

04. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்
உலக அளவில் நாள்தோறும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையிலிருந்து 30 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இதனை குறைப்பதற்காக, உயிரி எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான நவீன ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்துவது அவசியம் என்று வலியுறுத்தி பேசியிருந்தார்.

05. ஹைபிரிட் டீசல் எஞ்சின்
வாகனங்களில் 60 சதவீதம் டீசல் மற்றும் 40 சதவீதம் தண்ணீரில் இயங்கும் வகையில் டீசல் எஞ்சினுக்கான புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை உருவாக்குவது அவசியம் என்று அப்துல் கலாம் கூறியிருக்கிறார்.

06. எரிபொருள் தன்னிறைவு
2020ம் ஆண்டிற்குள் நம் நாட்டின் எரிபொருள் தேவையை சுயமாக சமாளிக்கும் திறனை பெறுவது அவசியம். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம் இருப்பதன் காரணமாகவே நம் நாட்டு பொருளாதாரத்தில் அதிக சுமை காணப்படுகிறது. மேலும், நம் நாட்டு இறக்குமதில் 87 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி. எனவே, எரிபொருள் தேவையில் சுதந்திரம் பெற வேண்டும். அணுசக்தி, சூரிய சக்தி மற்றும் உயிரி எரிபொருள் மூலமாக நம் நாட்டு எரிபொருள் தேவையை சமாளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதான் கலாம்...
தாம் ஈடுபட்ட துறையின் மீது கவனத்தையும், நாட்டத்தையும் செலுத்தாமல் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் பெறுவதற்கான வழிமுறைகளையும், எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க எடுக்க வேண்டிய வழிமுறைகளையும் அவர் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். அவரது 2020 வல்லரசு கனவை நனவாக்குவதற்கு மேற்கூறிய கருத்துக்களை வாகன தயாரிப்பாளர்களும், பொறியாளர்களும் கவனத்தில் கொள்வது அவசியம். அதற்கான உந்துதல்களையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்குவது அதைவிட முக்கியமானது.


Click it and Unblock the Notifications








