போர் விமானியாக ஆசைப்பட்ட அப்துல் கலாம்...!!

By Saravana

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பிறகு ஓர் எளிமையான தலைவர், விஞ்ஞானி, ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்ற மாமேதையின் திடீர் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகமே உருவாகி நிற்கிறது இந்திய தேசம்.

திறமையிலும் சரி, பதவி பலத்தின் உச்சத்தை தொட்ட போதிலும் சரி, மத மாச்சரியங்களை கடந்து தன் எளிமையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து மறைந்த அப்துல்கலாம் இந்திய அறிவியல் துறையின் புரட்சிக்கு வித்திட்டவர் என்றால் மிகையில்லை.

கனவு காணுங்கள், இலக்கை அடைய முயற்சியுங்கள் என்று சொன்ன அவரது இளவயது கனவு எது என்று தெரியுமா? ஆம், போர் விமானியாக ஆக வேண்டும் என்பதே அவரது கனவு. அதற்காக ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அது கிடைக்காமல் போகவே அவர் விஞ்ஞானியாக மாறியிருக்கிறார்.

ஆனாலும், இலக்கை அடைய தவறவில்லை. 2006ம் ஆண்டு தனது 74 வயதில் போர் விமானத்தில் கோ- பைலட்டாக பறந்து தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.

விமானப்படை தேர்வு

விமானப்படை தேர்வு

கனவு காணுங்கள். அந்த கனவை நனவாக்க செயல்படுங்கள் என்று கூறிய அவரது வார்த்தைகள் பலருக்கு உத்வேகத்தை கொடுத்து உயர்த்தியிருக்கிறது. அவரது இளம் வயது கனவு போர் விமானியாக ஆக வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுகளிலும் பங்கேற்றுள்ளார். ஆனால், விமானப் படை தேர்வில் நூலிழையில் அவரது கனவு பொய்யானது. அதையடுத்து, அவரது பாதை விஞ்ஞானியாக மாறியது.

 கனவு பலித்தது...

கனவு பலித்தது...

இளவயதில் போர் விமானி ஆக வேண்டும் என்ற அவரது கனவு பொய்த்தாலும், அதன் மீதான நாட்டம் குறையவில்லை. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது தனது ஆசையை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது 74. அந்த வயதிலும் தனது இளவயது ஆசையை நிறைவேற்ற அவர் தயக்கம் காட்டவில்லை.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

போர் விமானங்கள் அதிவேகத்தில் செல்லக்கூடியவை. அதில் பறப்பதற்கான உடல்தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். அப்துல்கலாமிற்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவரது உடல்நலம் சிறப்பாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டது.

உயர பறந்த கலாமின் ஆசை...

உயர பறந்த கலாமின் ஆசை...

எதிலும் உயரத்தை தொட வேண்டும் என்ற அவரது வேட்கை, இந்த விஷயத்திலும் நனவானது. ஒலியை விட இருமடங்கு வேகத்தில் செல்லக்கூடிய சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் அவர் பறப்பதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படியே, கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 8ந் தேதி சுகோய் - 30 எம்கேஐ போர் விமானத்தில் கோ-பைலட் இருக்கையில் அமர்ந்து பறந்தார்.

ஜீ- சூட் அணிந்து பறந்தார்...

ஜீ- சூட் அணிந்து பறந்தார்...

புனேயிலுள்ள லோகேகான் விமானப் படை தளத்தில் இருந்து அவரது போர் விமான பயணம் அமைந்தது. மேலும், விமானிகள் அணியும் ஜீ- சூட் அணிந்து அவர் பயணித்தார். அவரது சுறுசுறுப்புக்கும், இலக்கை அடைவதற்கான மன துணிச்சலுக்கும் இது ஒரு சான்று.

கோ- பைலட்டானார்...

கோ- பைலட்டானார்...

சுகோய் விமானப் பிரிவின் விமானி விங் கமாண்டர் அஜய் ரத்தோர் விமானத்தை இயக்கினார். மணிக்கு 1,200 கிமீ வேகம் வரை அந்த விமானத்தை அஜய் ரத்தோர் இயக்கினார். மேலும், போர் சமயங்களில் சுகோய் - 30 எம்கேஐ விமானத்தின் செயல்பாடுகள் பற்றியும் அவர் கலாமிடம் விளக்கினார். அதனை கோ பைலட் இருக்கையில் அமர்ந்தபடி, கலாம் ஆர்வமுடன் நேரடியாக அறிந்து கொண்டார்.

அந்த 36 நிமிடங்கள்...

அந்த 36 நிமிடங்கள்...

சுகோய் - 30 எம்கேஐ விமானத்தில் 36 நிமிடங்கள் அப்துல்கலாம் பயணித்தார். 7.5 கிமீ உயரத்தில் அந்த விமானம் பறந்தது. அப்போது வேகமாக வளைந்து செல்வது போன்ற சிறிய அளவிலான சாகசங்களையும் விமானி அஜய் ரத்தோர் செய்து காட்டினார். அத்துடன் 3 நிமிடங்கள் வரை விமானத்தின் சில கட்டுப்பாடுகளை அப்துல் கலாம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் ஜனாதிபதி

முதல் ஜனாதிபதி

போர் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அப்துல்கலாம் பெற்றார். அந்த நிகழ்வு அவரது வாழ்க்கையின் முக்கியமானதாகவே இன்று வரை அவரால் நினைவுகூறப்பட்டு வந்துள்ளது.

உயர பறக்க உதவிய கனவு...

உயர பறக்க உதவிய கனவு...

போர் விமானத்தில் பறந்ததன் மூலம் தனது சிறு வயது கனவு பூர்த்தியாகிவிட்டதை எண்ணி அவர் மிகுந்த சந்தோஷமும், திருப்தியும் கொண்டார். மேலும், எதிலும் உயர பறக்க வேண்டும் என்ற தனது கனவையும் மெய்பித்துக் கொண்டார்.

வல்லரசு கனவு...

வல்லரசு கனவு...

இந்திய வல்லரசாக வேண்டும் என்பதே அவரது பெரும் கனவு. அதனை எட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை மிக அதிகம். இலக்கை அடைவதற்காக, 20-20 என்பதற்கு புதிய இலக்கணம் வகுத்துக் கொடுத்து, 2020ல் வல்லரசாக வேண்டியதற்கான வழிமுறைகளை இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு போதித்து வந்தார். மாணவ சமுதாயத்தால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்பது அவரது திண்ணமான எண்ணம். அதனை மெய்பிக்க பாடுபடுவதற்கு அனைவரும் செய்யும் முயற்சியே அவருக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
“I am a contented man. My childhood dream has been fulfilled,” gushed President A P J Abdul Kalam after his 30-minute joy ride in the rear cockpit of a fighter aircraft (SU-30 MKI Flanker) on Thursday. This feat has made the President the oldest Indian to fly a fighter aircraft.
Story first published: Tuesday, July 28, 2015, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X