நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை!! பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளிவந்த நீண்ட நாள் இரகசியம்!
பீகார் மாநிலத்தில் மக்களின் பொருளாதார நிலைமை இந்த அளவிற்கு கீழ் உள்ளதா என கேட்க தோன்றும் அளவிற்கு, அந்த மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என ஓர் அதிர்ச்சிக்கர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. யார் வெளியிட்டுள்ள ரிப்போர்ட் இது? என்பது உள்பட இந்த ரிப்போர்ட்டை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் வாகனங்களின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. நாமாக இயக்கிய வாகனங்களை கடந்து, தானாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் அளவிற்கு இன்று நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். இருப்பினும், இப்போதும் சிலர் ஆட்டோமொபைல் வாகனங்களை ஆச்சிரியத்துடன் பார்க்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா...!

ஆம், பீகார் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலைமை தான். பசி, பட்டினியால் வாடும் ஏழை, எளியோர் இன்னமும் பீகார் மாநிலத்தில் நிறைய பேர் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கையில், சொந்தமாக வாகனம் வாங்க எத்தனை பேர் தயார்? என்பது அங்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஏனெனில், அங்கு மிகவும் சிலர் மட்டுமே சொந்தமாக வாகனங்களை வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர். எந்த அளவிற்கு என்றால், மொத்த 100%-இல் வெறும் 4.51 சதவீதத்தினர் மட்டுமே பீகாரில் சொந்தமாக வாகனங்களை வைத்திருப்பதாகவும், மீதி 95.49 சதவீதத்தினரிடம் இல்லை எனவும் சமீபத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

சொந்தமாக வாகனத்தை வாங்க முடியாததால், பீகாரில் பெரும்பாலான மக்கள் பேருந்து, இரயில் போன்ற பொது போக்குவரத்தை தான் அதிகளவில் பயன்படுத்துவதாகவும், சிலர் எங்கு செல்வதாக இருந்தாலும் நடந்தே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாகவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பீகாரில் மொத்தம் 13.07 கோடி பேர் வசிக்கின்றனர். ஆனால், இவர்களில் சுமார் 12.48 கோடி பேரிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்கிற அதிர்ச்சிக்கர விஷயத்தை இந்த கணக்கெடுப்பு அம்பலப்படுத்தி உள்ளது. அதாவது, ஏறக்குறைய 60 இலட்சம் பேர் மட்டுமே பீகாரில் சொந்தமாக வாகனத்தை கொண்டுள்ளனர். இதில் அதிகப்பட்சமாக, இருசக்கர வாகனங்கள் 49.69 லட்ச பேரிடம் உள்ளன.

ஆனால், பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 13.07 கோடியில் இந்த 49.69 லட்சம் என்பது வெறும் 3.8% மட்டுமே. பீகாரில் கார்களை வைத்திருப்போரின் எண்ணிக்கை 5.72 லட்சம் ஆகும். அதாவது, மொத்த மாநில மக்கள் தொகையில் வெறும் 0.11% பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். பீகாரில் 1.67 லட்சம் பேரிடம் குறைந்தது ஒரு டிராக்டர் ஆவது உள்ளது.
மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மக்களிடத்தில் உள்ள ஆட்டோமொபைல் வாகனங்களின் எண்ணிக்கை குறைவுதான். பீகாரை போல் மொத்த இந்தியாவும் இருந்திருந்தால், மக்களிடத்தில் ஆட்டோமொபைல் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்திருக்கும். ஆனால், இவ்வாறு வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் 3வது பெரிய ஆட்டோமொபைல் சந்தை நம் இந்தியா ஆகும். இதற்கு முக்கிய காரணம், நம் நாட்டின் அதிகப்படியான மக்கள் தொகை. பெரும்பாலான மக்கள் வாகனங்களை வாங்காவிடினும், மற்றவர்கள் வாங்கும் வாகனங்களின் எண்ணிக்கையே பெரிய தொகையாக வந்துவிடுகிறது. இருப்பினும், பீகாரில் சுமார் 95.49% பேரிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









