டூவீலர் வாங்கறப்ப 2 ஹெல்மெட் தரலேன்னா சட்டைய புடிச்சு கேளுங்க! ஒரே போடாய் போட்டு தாக்கிய மத்திய அரசு!
இந்தியாவில் சாலை விபத்துக்களில் (Road Accidents) 100 பேர் உயிரிழக்கிறார்கள் என்றால், அதில் 44 பேர், டூவீலர்களில் பயணம் செய்தவர்களாக உள்ளனர். எனவே டூவீலர்களில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) அதிகரிப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து (January 1, 2026), 2 புதிய விதிமுறைகள் அதிரடியாக அமலுக்கு வரவுள்ளன. இதில் ஒன்று ஏபிஎஸ் விதிமுறை ஆகும். ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) என்பதன் சுருக்கம்தான் ஏபிஎஸ் (ABS).

தற்போதைய நிலையில் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களில் மட்டுமே ஏபிஎஸ் வசதி கட்டாயமாக வழங்கப்படுகிறது. ஆனால் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து டூவீலர்களிலும் ஏபிஎஸ் வசதி கட்டாயமாக இருக்க வேண்டும். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்கூட்டர், பைக் என எந்தவொரு டூவீலராக இருந்தாலும், அதன் இன்ஜின் திறன் எவ்வளவாக இருந்தாலும், உற்பத்தி நிறுவனங்கள் ஏபிஎஸ் வசதியை வழங்குவது கட்டாயம். அதாவது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து டூவீலர்களிலும் ஏபிஎஸ் வசதி இருக்கும்.

இந்தியாவில் 100 டூவீலர்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 40 டூவீலர்கள், 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்டவை. இந்த 40 சதவீத டூவீலர்கள் தற்போது ஏபிஎஸ் வசதி இல்லாமல்தான் விற்பனையாகி கொண்டுள்ளன. ஆனால் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து 100 சதவீதம் அனைத்து டூவீலர்களும் ஏபிஎஸ் வசதி கொண்டதாக இருக்கும்.
ஏபிஎஸ் வசதி, சாலை விபத்துக்களை குறைப்பதில், மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை, சாலை விபத்துக்களை குறைக்க, ஏபிஎஸ் உதவி செய்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
மற்றொரு விதிமுறை ஹெல்மெட்கள் (Helmets) தொடர்புடையதாகும். அதாவது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து, புதிதாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டூவீலர் உடனும், 2 புதிய ஹெல்மெட்களை வழங்க வேண்டும். அத்துடன் அவை பிஐஎஸ் தரச்சான்று பெற்ற ஹெல்மெட்கள் (BIS-certified Helmets) ஆகவும் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் ஒரே ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இனி டூவீலரை ஓட்டுபவர் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவருக்கும் சேர்த்து, 2 ஹெல்மெட்களை வழங்குவது கட்டாயம் ஆகவுள்ளது. இதுவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.
ஏனெனில் தலையில் கடுமையான காயம் ஏற்படுவதுதான், டூவீலர் விபத்துக்களில் நிறைய உயிரிழப்புகளுக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே புதிய டூவீலர்களை வாங்கும்போது, 2 ஹெல்மெட்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளை வழங்குவதால், டூவீலர்களின் விலை சற்று உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விலையை விட, பாதுகாப்பே மிகவும் முக்கியமானது. விலைக்காக பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது சரியான விஷயமாக இருக்காது. எனவே மத்திய அரசின் நடவடிக்கை கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








