பெரிய ரக வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
வாகன விபத்துகளைக் குறைக்கும் விதமாக புதிய மற்றும் பழைய பெரிய ரக வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்தைக் கட்டாயம் பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றுடன் நான்காவதாக வாகனமும் சேர்ந்துவிட்டது என்றேக் கூறலாம். ஏனென்றால் மனிதன் அன்றாட பயன்பாட்டில் இதுவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு வாகனம் பார்ப்பதே அரிதாகப் பார்க்கப்பட்டநிலையில், தற்போது வீட்டுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் சுலபமாக பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு வாகனங்கள் மீதான மோகம் மக்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
மக்களின் இந்த தீராத மோகத்தினால், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் எண்ணிக்கைக்கு போட்டியாக வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவுகளும் கடுமையாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. அவ்வாறு ஏற்படும் பின்விளைவுகளால் பெரும்பாலானோர் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.

வாகன எண்ணிக்கை அதிகரிப்பினால் புவி வெப்பமயமாதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு தலைவிரித்து ஆடி வருகின்றது. இதுபோன்ற பின்விளைவுகள் அரசுக்கும், அதைச் சார்ந்த துறைக்கும் கடும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றது.
இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் சிக்கலாக மாறிவருகிறது. மேலும், உலகம் முழுவதும் சாலை விபத்தில் இறப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், இந்தியாவில் மட்டும் சராசரியாக 1.5 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தினால் இறப்பதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் 18 முதல் 35 வயதுடைய நபர்களே அதிகமாக உள்ளனர். இந்த அவலைநிலையைத் தவிர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்துவது, காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட்டை கட்டாயப்படுத்துவது என பல்வேறுகட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், இதனை துளியும் மதிக்காத வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு, அதற்கான விபரீதத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, என்சிஏபி அமைப்பின் புதிய திட்டத்தின்படி, வருகின்ற 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏபிஎஸ் மற்றும் இஎஸ்சி எனப்படும் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயம் பொருத்த வேண்டுமென்று மத்திய போக்குவரத்துத்துறை முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இதேபோல, வருகின்ற ஏப்ரம் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் என்னும் பிரேக் சிஸ்டத்தைக் கட்டயமாக பொருத்த வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதில், 125 அல்லது அதற்கும் மேலான cc-யைக் கொண்டு இயங்கும் இரு சக்கர வாகனங்களில், 'பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு' (ABS-Anti Lock Breaking) பிரேக்கிங் சிஸ்டமும், 125cc-க்கு குறைந்த திறனுள்ள பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் சிபிஎஸ் (CBS) எனப்படும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தையும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பெரிய ரக வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்துவது கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தைக் கட்டாயமாகப் பொருத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் வருகின்ற 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளும், புதியதாக விற்பனைக்கு வரும் வாகனங்களில் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவும் இதனை கட்டாயம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, வாகனத்தில் வேகமாக சென்றுக்கொண்டிருக்கும்போது நாம் பிரேக் பிடித்தால், உடனடியாக சக்கரம் சுழல்வதை லாக் செய்துவிடாமல், சிறிதுசிறிதாக லாக் செய்து வாகனத்தின் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தும். இந்த செயலானது கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றுவிடும். மேலும், இந்த தொழில்நுட்பமானது, பிரேக் பிடிக்கும்போது சாலைக்கும், டயருக்கும் உள்ள உராய்வை அதிகப்படுத்தி, வாகனம் கட்டுப்பாட்டை இழக்காமல் தடுக்கும்.


Click it and Unblock the Notifications