தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
கோடை வெயில் இந்தியா முழுவதும் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த வெயிலிலும் நடுரோட்டில் நின்று டிராபிக்கை கையாளும் போலீசாருக்கு தற்போது லக்னோவில் ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் அனைத்து போலீசார்க்கும் இப்படியான ஹெல்மெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பலர் வீட்டிலிருந்து வெளியே வரவே தயங்கி வருகிறார்கள். இந்நிலையில் முக்கிய நகரங்களில் நடுரோட்டில் நின்று டிராபிக்கை கிளியர் செய்ய வேண்டிய பணியில் பல்வேறு போலீசார்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்களின் கடமைக்காக இந்த பணியை அவர்கள் கடும் வெயிலையும் பார்க்காமல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஏசி ஹெல்மெட் ஒன்றை உருவாக்க வதோதரா ஐஐஎம் மாணவர்கள் முயற்சி செய்தார்கள். அதன் பலனாய் தற்போது மாணவர்கள் உருவாக்கிய ஏசி ஹெல்மெட் தயாராகியுள்ளது.
இந்த ஹெல்மெட் ஏற்கனவே கடந்த ஆண்டு அகமதாபாத் பகுதியில் சோதனை முயற்சியாக பரிசோதனை செய்யப்பட்டது. அது மீண்டும் மேம்படுத்தப்பட்டு தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீசாருக்கு சோதனை முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் வதோதரா பகுதியில் உள்ள போலீசாருக்கு இப்படியான ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக கான்பூர் பகுதியில் உள்ள போலீசாருக்கும் இப்படியான ஹெல்மெட் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உபி மாநிலம் லக்னோவிலும் டிராபிக் போலீசாருக்கு இப்படியான ஹெல்மெட்டை வழங்க அம்மாநில போலீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஐஐஎம் மாணவர்கள் தயாரித்த ஹெல்மெட்டை வரவழைத்து போலீசாருக்கு பயன்படுத்துவதற்காக சோதனை முயற்சியில் வழங்கியுள்ளார்கள். இந்த சோதனை முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை நேரத்தில் இப்படியான ஹெல்மெட் போலீசாருக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஏசி ஹெல்மெட் முழுவதுமாக பேட்டரியில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஹெல்மெட்டை ஒரு தடவை சார்ஜ் போட்டால் போதும் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு இந்த ஹெல்மெட் பேட்டரியிலேயே இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பேட்டரியை தனியாக வழங்கியுள்ளார்கள். ஹெல்மெட்டிற்கு பின் பக்கம் வயர் வழியாக போலீசாரின் இடுப்பில் பேட்டரியை கட்டிக் கொள்ளும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஹெல்மெட் 500 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. வழக்கமாக இருக்கும் ஹெல்மெட்டின் எடை தான் என்பதால் இந்த ஏசி ஹெல்மட்டை அணிய போலீசாருக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணியும் போது தலைக்கு உள்ளே வெப்பம் அதிகம் தெரியாதவாறு காற்றை சுழற்றிக் கொண்டே இருக்கும் வகையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏசி ஹெல்மெட்டில் முன்பக்கம் வைசர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது சன் ஷேடுகளாக கண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கோடை வெப்பம் வெயிலில் நின்று பணியாற்றும் போலீசாரை பெரிய அளவுக்கு பாதிக்காத வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் இருக்கிறது.
தற்போது வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இந்த ஏசி ஹெல்மெட்டை போலீசார் கோடை வெப்பத்தை தணிக்க பயன்படுத்தி வரும் நிலையில், தமிழக போலீசாரும் முயற்சி செய்து, இதை தமிழக டிரஃபிக் போலீசாருக்கு பயன்படுத்த முடியுமா என சோதனை செய்ய வேண்டும். தமிழக போலீசார் இதை பயன்படுத்த முடியும் என்கிற பட்சத்தில் தமிழக முழுவதும் உள்ள போலீசாருக்கு இது போன்ற ஹெல்மெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெயில் காலத்தில் இப்படியான ஏசிகள் மட்டும் நிச்சயம் உபயோகமாக இருக்கும். இதை போலீசார் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் ஹெல்மெட் அணிந்து செய்ய வேண்டிய பணியில் இருப்பவர்களுக்கும் கோடை காலத்தில் உதவும் வகையில் இப்படியான ஹெல்மெட்டுகளை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் மார்க்கெட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









