லாரி ஓட்டுநர்களுக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு! வெயில், குளிர் என இனி கஷ்டப்பட வேணாம்!
இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய லாரிகள் அனைத்தும் இனி ஏசி வசதி உடனே தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை குறிப்பிட்ட தேதியை சொல்லி அந்த நாள் முதல் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள டிரக் டிரைவர்களுக்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு இந்தியாவில் உள்ள லாரி டிரைவர்களுக்கு உதவும் வகையில் லாரிகளுக்கான கட்டுமானங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்தது. இதற்கான சட்ட வரைவுகளை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த வரைவை ஆய்வு செய்த மத்திய அரசு தற்போது இதற்காக ஒப்புதலையும் வழங்கி உள்ளது.

இதன்படி இந்தியாவில் விற்பனைக்கு வரும் டிரக்குகள் வரும் 2025-ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி கேபின் கொண்ட டிரக்குகளாக மட்டுமே விற்பனைக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக N2 மற்றும் N3 ஆகிய ரக வாகனங்கள் இனி ஏசி கேபினுடன் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத கேபின் கொண்ட வாகனங்கள் தயாரிக்கப்பட்டால் அந்த வாகனங்களுக்கு பதிவெண் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள டிரக் ஓட்டுநர்களின் வசதிக்காகவும் அவர்களது வேலைக்கான சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டிரக்குகள் பல்வேறு மாநிலங்களை கடந்து சரக்குகளை கொண்டு செல்கின்றன. இதனால் இதில் பயணிக்கும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு அங்கு ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. சில இடங்களில் குளிர் இருக்கிறது. சில இடங்களில் வெயில் இருக்கிறது.

இவர்கள் வாகனத்தில் ஏசி இல்லாத காரணத்தால் கடும் குளிர் மற்றும் வெயில் ஆகியவற்றை இவர்கள் பொறுத்துக் கொண்டு பயணிப்பதால் இவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனையும் ஏற்படுகிறது. இதற்காக மத்திய அரசு புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து டிரக்குகளுக்கும் ஏசியை கட்டாயமாக்கி உள்ளது. அதிகமான வெயில் குளிர் என எது வந்தாலும் இந்த ஏசி மூலம் எப்பொழுதும் லாரிக்குள் ஒரே மாதிரியான வெப்ப நிலை இருப்பதை உறுதி செய்து வைத்துக் கொள்ள முடியும்.
இப்படியாக பொருத்தப்படும் ஏசி ஐஎஸ்ஐ தரச் சான்று பெற்ற ஏசியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நீண்ட நாட்களாக பொது போக்குவரத்து துறை பெரிய அளவில் மாற்றங்களை சந்திக்கவில்லை. தற்போது செய்துள்ள இந்த மாற்றம் இந்திய டிரைவர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் சரக்குகளை எடுத்துச் செல்லும் இவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூண்களாக உள்ளார்கள். ஆனால் இவர்கள் பல்வேறு விதமான பருவ சூழ்நிலைகளை சந்தித்து அதிக வேலைப்பளு காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவவே இப்படியான ஒரு விதிமுறையை வகுத்துள்ளோம்." என கூறினார்.
இப்படியாக செய்வதால் இந்தியாவில் கமர்சியல் வாகனங்களுக்கான விலை அதிகரிக்கும் அதை ஆப்ரேட் செய்வதற்கான செலவும் அதிகரிக்கும் என்பதால் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடந்தது ஆனால் இறுதியாக இதைக் கொண்டு வருவதன் மூலம் ஆகும் செலவையும் இதனால் ஏற்படும் நன்மைகளுக்கான பலனுக்கு ஒரு மதிப்பை போட்டு பார்த்தால் அதனால் கிடைக்கும் மதிப்பும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதை பொறுத்துவதால் கிடைக்கும் லாபமே அதிகமாக இருக்கிறது.
இந்த சட்ட வரைவு முதல் முதலில் வகுக்கப்பட்ட போது வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இதை விசாரித்த மத்திய அரசு இதற்கான கால அவகாசத்தை கூட்டி அக்டோபர் 1ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நீண்ட நாட்களாக லாரி ஓட்டுநர்களுக்கான சௌகரியம் மற்றும் பாதுகாப்பு குறித்து மோட்டார் வாகன சட்டத்தில் எந்தவிதமான திருத்தங்களும் கொண்டு வராத நிலையில் தற்போது மிக முக்கியமான இந்த திருத்தம் அவர்களுக்கு பெரும் உதவியை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை நான் நிச்சயம் பாராட்டியாக வேண்டும் இதை லாரி ஓட்டுனர்களும் நிச்சயம் பாராட்டுவார்கள்.


Click it and Unblock the Notifications









