இந்த ஒரு விஷயத்தை செய்தோம், சாலை விபத்து மரணங்கள் குறைந்துவிட்டது!! மார் தட்டி சொல்லும் மாநில அமைச்சர்!
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பெற்ற கேமராக்களினால், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் சுமார் 50% வரையில் குறைந்துள்ளதாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏஐ கேமராக்களை பற்றி சில சர்ச்சைகள் உலா வந்து கொண்டு இருப்பினும், இந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக விளங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
உலகம் தொழிற்நுட்பங்களில் நாளுக்கு நாள் வளர்ச்சியை கண்டு வருகிறது. இதற்கான கண்டுப்பிடிப்புகளில் பல்வேறு நாடுகளின் ஆராச்சியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுவரும் தொழிற்நுட்பமாக ஏஐ கேமரா விளங்குகிறது. நம் இந்தியாவிலும் கூட பல்வேறு விதமான தேவைக்களுக்காக ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலை விதிகளை மீறுவோரை அடையாளம் காணவும் ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில மாநிலங்களில், சாலை விதிகளை மீறுவோர்க்கு ஆட்டோமேட்டிக்காக அபராத செல்லானை வழங்கும் விதமாகவும் ஏஐ கேமாரக்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். அத்தகைய மாநிலங்களுள் ஒன்று நம் அண்டை மாநிலமான கேரளா.
ஆனால், கேரளாவில் இதன் காரணமாகவே சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அதாவது, சில வாகன ஓட்டிகளுக்கு தவறுதலாக, ஆதாரமின்றியும் ஏஐ கேமரா அபராதங்களை விதித்துள்ளது. இந்த விஷயம் மக்கள் மத்தியில் வைரலாகியதை தொடர்ந்து, போலீஸார் வேண்டுமென்றே அபராதங்களை பெறுவதற்காக இவ்வாறு செய்வதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், கேரள போலீஸார் இந்த விஷயத்தில் பின்வாங்குவது போல் இல்லை.
இந்த நிலையில், கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, மாநிலத்தில் ஏஐ கேமராக்களை பொருத்திய பின்பு விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், சாலை விபத்துகளினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் சுமார் 50% குறைந்துள்ளதாகவும் அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறியுள்ளார். கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் தான் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதுகுறித்து மேலும் பேசிய கேரள அமைச்சர், சாலை விபத்துகளினால் கேரள மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 344. இந்த வருடத்தில் ஏஐ கேமராக்களை பொருத்திய பிறகு இதே ஜூன் மாதத்தில் பதிவான சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெறும் 140 என கூறியுள்ளார்.
அத்துடன், ஏஐ கேமராக்கள் சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவோரின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளதாக கூறும் அமைச்சர் ஆண்டனி ராஜூ, பாதுகாப்பான கேரள திட்டத்தின் ஒரு பகுதியாக ஏஐ கேமராக்களை கேரளாவில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொருத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான கேரள திட்டத்தின் முக்கிய நோக்கமே, மாநிலம் முழுவதும் பாதுகாப்பான சூழலை கொண்டுவர வேண்டும் என்பதாகும்.
இதற்கேற்ப ஏஐ கேமராக்களின் பயன்பாடு கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் மட்டும் மொத்தம் 726 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர் தரத்திலான காட்சிகளுடன் போக்குவரத்தை கண்காணிக்கும் இந்த கேமராக்களுக்காக கேரள மாநில அரசு இதுவரையில் 232 கோடிகளுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. மறுப்பக்கம், ஏஐ கேமராக்களை சுற்றி நடக்கும் சர்ச்சைகளை களையெடுக்கும் முயற்சியிலும் கேரள அரசு ஈடுப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏஐ கேமராக்களின் பயன்பாடு இப்போதுதான் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், ஏஐ கேமராக்களால் ஏற்படும் பிழைகளை விரைவில் தீர்க்க முடியும். ஏஐ கேமராக்களின் கண்காணிப்பில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் கொண்டுவரப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கான வேலைகளில் கேரள அரசு ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. நமது தமிழக அரசும் கேரளாவை பின்பற்றி ஏஐ கேமராக்களை அதிகப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








