இதை யாருமே எதிர்பாக்கல... டோல்கேட் விஷயத்தில் தமிழக அரசு சூப்பரான முடிவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!
டோல்கேட் விஷயத்தில் தமிழ்நாடு அரசு தற்போது சூப்பரான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வெகு சமீபத்தில் 24 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுக்க பல்வேறு டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரம் தமிழ்நாடு சட்டசபையில் தற்போது எதிரொலித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எம்எல்ஏ ஜவாஹிருல்லா இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். டோல்கேட்களில் கட்டண உயர்வால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசினார்.

அத்துடன் இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''மாநகர மற்றும் நகர பகுதிகளில் இருந்து 10 கிலோ மீட்டர்கள் தொலைவில்தான் டோல்கேட்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே விதிமுறையாகும்.

ஆனால் சென்னை மாநகரை சுற்றிலும் மட்டும் 5 டோல்கேட்கள் இயங்கி கொண்டுள்ளன. இந்த டோல்கேட்கள் அனைத்திலும் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த டோல்கேட்களை நிரந்தரமாக மூட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். நேரில் சென்று இந்த கோரிக்கை முன்வைக்கப்படும்.

முறைப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வெறும் 16 டோல்கேட்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இங்கு 48 டோல்கேட்கள் இயங்கி கொண்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 32 டோல்கேட்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. அந்த 32 டோல்கேட்களையும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்திப்போம். அப்போது இதனை வலியுறுத்துவோம்'' என்றார். 32 டோல்கேட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் டோல்கேட்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மிக நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு சட்டமன்றத்திலேயே அறிவித்திருப்பது தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்பட்சத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக அடிக்கடி தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் கார் மற்றும் லாரி போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் இதனால் அதிகளவில் பயன் அடைவார்கள்.

அவர்கள் தற்போது டோல்கேட் கட்டணத்திற்காகவே பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. சில சமயங்களில் டோல்கேட்களை தவிர்ப்பதற்காக வாகன உரிமையாளர்கள் மாற்று வழியில் சுற்றி செல்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் வாகனங்களில் எரிபொருள் விரயம் ஆகிறது. அத்துடன் நேர விரயமும் ஏற்படுகிறது.

எனவே இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முடிவு கட்டப்படுமா? என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்னதாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த வரிசையில் விதிமுறைகளை மீறி கட்டண வசூலில் ஈடுபட்டு வரும் டோல்கேட்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்து விட்டால், தமிழ்நாடு அரசுக்கு வாகன உரிமையாளர்களின் ஆதரவு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை. டோல்கேட்கள் அகற்றப்பட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








