அஜித்னே தெரியாம உதவி கேட்ட ரசிகர்... இறங்கி வந்து ஹெல்ப் செய்த மரணமாஸ் சம்பவம்...
நடிகர் அஜித் தனது ரசிகரின் பைக்கிற்கு பஞ்சர் போட்டு உதவி செய்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் வரும் போது அஜித் என்றே தெரியாமல் ரசிகர் ஒருவர் உதவி கேட்ட நிலையில் இதைச் செய்துள்ளார். இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவருக்குப் பெயரைச் சொன்னால் தமிழகத்தில் எந்த மூலையிலும் தெரியாத ஆள் இருக்கும் எனச் சொல்லி விட முடியாது. இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாம் தமிழ்நாட்டிற்கே திருவிழா வந்தது போல மாறிவிடும். அப்படியாக தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் ரசிக பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் அஜித், இவருக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு உள்ள தொடர்பு குறித்து நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இவர் கடந்த சில ஆண்டுகளாக பைக் ரைடிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வலிமை திரைப்படத்தின் படப் பிடிப்பின் போது இவர் ரஷ்யாவில் பெரும் பகுதியில் ஒரு பைக் ரைடு சென்றிருந்தார். அப்பொழுது அவர் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் எல்லாம் அவ்வப்போது வெளியாகின. அடுத்தாக இவர் ஐரோப்பா பகுதியில் பைக் ரைடிற்கு சென்றிருந்தார். இந்த புகைப்படங்களும் அப்பொழுது வைரலாக பரவின.

தற்போது இவர் இந்தியாவில் பல பகுதிகளில் பைக் ரைடில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் பயணிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தினம் தினம் இவர் பைக்கில் பயணிக்கும் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது ரசிகர் ஒருவருக்கு உதவி செய்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சு கஸ்யப்பா, இவரும் பைக்கில் இந்தியாவில் பல பகுதிகளில் வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்குத் தான் நடிகர் அஜித் தானாக முன்வந்து உதவி செய்திருக்கிறார். இந்தச்சம்பவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர் "நான் எனது பைக் பயணத்தில் முதன் முறையாக பைக் பஞ்சராக உதவிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வழியாக பிஎம்டபிள்யூ 1250ஜிஎஸ்ஏ பைக்கை ஒருவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அவரது பைக்கை நிறுத்தி அவரிடம் ஏர் கம்பிரஷர் இருக்கிறதா என உதவி கேட்டேன் அவர் அப்பொழுது அது மற்றொரு பைக்கில் இருப்பதாகவும் இது இங்கிருந்து 10 நிமிடம் வந்த வழியிலேயே திருப்பச் சென்றால் தான் எடுக்க முடியும் என கூறினார்.

அதன் பின் அவரிடம் அவரது பைக்கை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதன் பின் அவர் என்னிடம் என்னுடைய பெயர் என்ன, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டார். என் பதில் சொன்னதும் அவர் தன்னை என் பெயர் அஜித் குமார் என அறிமுகம் செய்து கொண்டார். அதன் பின்பு தான் அவரை சற்று உற்றுப் பார்த்த போது அவர் நடிகர் அஜித் குமார் என்பதைத் தெரிந்து கொண்டேன். பின்னர் அவர் தன் பைக்கிலிருந்து கீழே இறங்கி எனக்கு உதவ முன் வந்தார்.

அவரே இறங்கி எனது பைக்கை சரி செய்து கொடுத்தார். பின்னர் நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில மணி நேரம் பைக் ரைடு செய்தோம். பின்னர் பெரும் தயக்கத்துடன் அவரை எங்களுடன் டீ அருந்துமாறு கேட்டோம். அவர் எந்த தயக்கமும் இல்லாமல் அடுத்த டீ கடையில் வண்டியை நிறுத்தி டீ குடிக்க எங்களுடன் வந்தார். பின்னர் அவர் இந்த பயணத்தில் அவர் கடந்து வந்த பாதை குறித்து ஒரு 10 நிமிடங்கள் பேசிவிட்டு பின்னர் எங்களுக்கு குட்லக் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இந்த பதிவை நான் பதிவிட இரண்டு காரணங்கள் உள்ளன. 1. ஒரு மிகப்பெரிய மனிதன் சிறு தலை கணம் கூட இல்லாமல் தன் ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அன்பு கொள்கிறார் 2. எனக்கு இந்த நாளை மறக்கவே முடியாது அவர் என்னுடைய பார்வையையே மாற்றிவிட்டார். " என நடிகர் அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியது. அஜித் ரசிகர்கள் எல்லாம் இந்த சம்பவத்தைக் கொண்டாடிவருகின்றனர்.

இதில் நடிகர் அஜித் பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் பைக்கை ஓட்டுகிறார். இந்த பைக் 2 சிலிண்டர் இன்ஜின் உடன் 1254 சிசி இன்ஜின் திறன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது 136 பிஎஸ் பவரை 7750 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும், 143 என்எம் டார்க் திறனை 6250 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும், இந்த பைக்அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கின் பிரேக்கிங் சிஸ்டத்திற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இருக்கிறது. இதன் விலை ரூ22.5 லட்சமாகும்


Click it and Unblock the Notifications