பிஸியான நேரத்திலும் தல அஜீத் திடீரென ஜெர்மனி சென்றதற்கு காரணம் இதுதான்... ரசிகர்கள் நெகிழ்ச்சி...
மிகவும் பிஸியான நேரத்திலும் தல அஜீத் திடீரென ஜெர்மனி சென்று ஒரு சிலரை சந்தித்து பேசியுள்ளார். இதற்கான காரணம் உங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
மிகவும் பிஸியான நேரத்திலும் தல அஜீத் திடீரென ஜெர்மனி சென்று ஒரு சிலரை சந்தித்து பேசியுள்ளார். இதற்கான காரணம் உங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த செய்தியின் முடிவில், நீங்கள் அஜீத் ரசிகராக மாறிவிட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

தமிழ் சினிமா ரசிகர்களால் 'தல' என கொண்டாடப்பட்டு வருபவர் அஜீத். திரையுலகின் ஜென்டில்மேன் யார்? என்று கேள்வி எழுப்பினால், அனைவரின் கைகளும் ஒரு சேர அஜீத்தை நோக்கிதான் நீளும். ஏனெனில் அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் கண்ணியமாக நடந்து கொள்ளக்கூடியவர் அஜீத்.

அஜீத் குறித்து சர்ச்சை எழுவது என்பதெல்லாம் மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். எவ்வித சர்ச்சைகளிலும் சிக்கி கொள்ளாமல் இருப்பதிலும் அஜீத் கெட்டிக்காரர். அதே நேரத்தில், உதவி தேவைப்படுபவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்வதிலும் அஜீத்திற்கு நிகர் அஜீத்தான்.

எனவேதான் நடிகர் என்பதையும் கடந்து அவர் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். அஜீத்தின் நடிப்பிற்கு இருக்கும் ரசிகர்களை காட்டிலும், அவரது குண நலன்களுக்காக இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

திரையுலகை கடந்து ஆட்டோமொபைல் துறையிலும் அஜீத் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு பைக் ரேஸர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அஜீத் பைக் ஓட்டும் சீன் ஒன்று வந்து விட்டால் போதும், திரையரங்கில் ரசிகர்களின் விசில் சத்தம் காதையே கிழித்து விடும்.

இந்த சூழலில், சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட எம்ஐடி கல்லூரி மாணவர்கள், சர்வதேச அளவிலான ட்ரோன் வடிவமைக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவ அவசர காலங்களில் நீண்ட நேரம், அதிக தூரம் பயணிக்கும் ட்ரோன்களை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் போட்டி.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குழுவிற்கு தக்ஸா என பெயரிடப்பட்டது. ஆனால் தக்ஸா குழுவிற்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான சரியான நபர் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் தல அஜீத்தின் உதவியை எம்ஐடி கல்லூரி நிர்வாகம் நாடியது. ஆட்டோமொபைல் துறையில் அஜீத்திற்கு ஆர்வம் அதிகம் என்பதும் இதற்கு ஒரு காரணம். எம்ஐடி நிர்வாகம் கேட்டு கொண்டதும், மறுப்பேதும் தெரிவிக்காமல் உடனடியாக தக்ஸா குழுவின் ஆலோசகர் பொறுப்பை ஏற்று கொண்டார் அஜீத்.

இதன்பின் அவரது வழிகாட்டுதலில் மாணவர்கள் ட்ரோனை வெற்றிகரமாக வடிவமைத்து முடித்தனர். அதே கையோடு கடந்த செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ட்ரோன் வடிவமைக்கும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.

இதில், தக்ஸா குழு நூலிழையில் முதலிடத்தை தவற விட்டது. இதனால் இரண்டாம் இடமே கிடைத்தது. இருந்தாலும் சர்வதேச அளவிலான போட்டி ஒன்றில், இரண்டாம் இடம் பிடித்த காரணத்திற்காக, தக்ஸா குழுவிற்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

தக்ஸா குழுவிற்கு ஆலோசகராக இருந்த அஜீத்தும் பாராட்டு மழையில் நனைய தொடங்கினார். போட்டி முடிந்த பிறகும் கூட தக்ஸா குழுவினர் தங்கள் முயற்சியை கைவிடவில்லை. தாங்கள் உருவாக்கிய ட்ரோனை, ஏர் ஆம்புலன்ஸாக மாற்றும் முயற்சியில் தற்போது அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது, உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வெகு விரைவாக கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், அந்த ட்ரோனை ஏர் ஆம்புலன்ஸாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.

சாலை மார்க்கமாக உடல் உறுப்புகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவேதான் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து, அதன் மூலமாக உடல் உறுப்புகளை கொண்டு செல்ல உதவ வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர்.

அத்துடன் தாங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸை சென்னை-வேலூர் இடையே பயன்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். மாணவர்களின் இந்த முயற்சிக்கு தல அஜீத்தும் துணை நின்று, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

தற்போது தக்ஸா குழு உருவாக்கியுள்ள ட்ரோன் மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அத்துடன் சுமார் 15 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனும் அதற்கு உள்ளது. அந்த ட்ரோனைதான், ஏர் ஆம்புலன்ஸாக மாற்றுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

ஏர் ஆம்புலன்ஸை உருவாக்கும் தக்ஸா குழுவின் முயற்சி வெற்றி பெற்றால், மிக நீண்ட தூரம் பயணிக்கும் உலகின் முதல் ஏர் ஆம்புலன்ஸ் என்ற பெருமையை இது பெறும் என்பது குறிப்பிடத்தகுந்த ஓர் விஷயம்.

இந்த சூழலில் தல அஜீத்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அதன்பின் உடனடியாக தக்ஸா குழுவினருடன் தல அஜீத் மீண்டும் இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், எம்ஐடி கல்லூரி வளாகத்தில் அவர் தக்ஸா குழுவை சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் ரகம்.

ஆம், தக்ஸா குழுவினரை நடிகர் அஜீத் சந்தித்து கலந்துரையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவின.

இந்த சூழலில் தக்ஸா குழுவின் அடுத்த கட்ட திட்டம் தொடர்பான பணிகளுக்காக தல அஜீத் தற்போது ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஜோட்னெர்வ் மற்றும் அதிகாரிகளுடன் அஜீத் ஆலோசனை நடத்தினார்.

தற்போது அந்த புகைப்படங்கள்தான் சமூக வலை தளங்களை ஆக்கிரமித்துள்ளன. நடிப்புடன் சேர்த்து அறிவியலிலும் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறார் தல அஜீத். இந்த தகவல்களை அஜீத்குமார் ஃபேன்ஸ் க்ளப் வெளியிட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது.

அந்த மகிழ்ச்சியில் இருந்தே அஜீத் ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள்ளாக தல அஜீத் ஜெர்மனி சென்று, ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசிய மற்றொரு மகிழ்ச்சியான செய்தி அவர்களுக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications