நடிகர் ஜெய்யிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் இல்லையாமே!
குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்யிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்யிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் போன்றவை இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

நடிகர் விஜய் நடித்த பசுபதி திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் ஜெய். சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலமாக புகழடைந்தார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் நண்பர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்று விட்டு தனது ஆடி காரில் வீடு திரும்பியுள்ளார்.

காரை நடிகர் ஜெய் அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அடையாறு மலர் மருத்துவமனை அருகில் அந்த கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு வந்த போக்குவரத்து போலீசார் காருக்குள் மயங்கி நிலையில் இருந்த நடிகர் ஜெய் மற்றும் அவரது நண்பர்களை வெளியே கொண்டு வந்தனர். காரின் முன்பகுதி லேசாக சேதமைடைந்தது. அப்போது, அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
Recommended Video


இதையடுத்து, இருவரையும் போலீசார் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மது போதையில் வாகனம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரது டிரைவிங் லைசென்ஸை 6 மாத காலத்திற்கு ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரைத்தனர். இதனிடையே, நடிகர் ஜெய் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், நடிகர் ஜெய்யிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகர் ஜெய்யிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் இல்லையாம். நகல் மட்டுமே உள்ளதாம். மேலும், காரின் பதிவுப் புத்தகமும் இல்லையாம். மேலும், காரின் இன்ஸ்யூரன்ஸும் புதுப்பிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. காரின் நம்பர் பிளேட் கூட விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை.

ஏற்கனவே இரண்டு முறை குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக அபாரதம் செலுத்தி இருக்கிறார். இது மூன்றாவது முறையாம். எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்வதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனராம். இதில், அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜீத் போன்று நடிகர் ஜெய்யும் கார் ரேஸர். கோடம்பாகத்திலிருந்து மற்றொரு கார் ரேஸர் என்று பெருமைப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வருகிறார். மேலும், பொதுமக்கள் உயிருக்கும் ஆபத்தான வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








