பிரேமம் படத்தில் நடித்தவர் தானே இவரு... பின்னால் நிற்கும் மஹிந்திரா காரை பற்றி தெரியுமா?
பிரேமம் (Premam), கேரளாவில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான இதனை உங்களில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில் கல்லூரி உதவியாளராக நடித்தவர் நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம் (Jayashankar Karimuttam). பிரேமம் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருவார். இவர் தற்போது புதியதாக மஹிந்திரா (Mahindra) வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த மலையாள நடிகரை பற்றியும், அவர் வாங்கியுள்ள மஹிந்திரா வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
மலையாள சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர்கள் ஏராளம். அத்தகையவர்களுள் ஒருவர் தான், நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம் ஆவார். 2011இல் 'சிட்டி ஆஃப் கோல்டு' என்கிற படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தாலும், ஜெயசங்கரின் சினிமா பயணம் ஆனது பிரேமம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகே துவங்கியது.

பிரேமம் படத்தில் கல்லூரி அலுவலக உதவியாளராக நடித்த நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம், இந்த படத்தில் கல்லூரி மாணவர்களுடன் உடன் நெருக்கமாக இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இருப்பினும் ஒரு காட்சியில், கல்லூரி மாணவராக இருக்கும் நடிகர் நிவின் பாலி ஜெயசங்கரின் சட்டையை பிடித்து திட்டுவது போன்ற காட்சி இருக்கும். அப்போது நிவின் பாலி கூறும் "மாதா, பிதா, குரு" என்கிற வசனம் படம் வெளியான சமயத்தில் பலரை கவர்ந்தது.
பிரேமம் திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டத்திற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் மட்டும் இவரது நடிப்பில் 6 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இருப்பினும், இவர் இன்னும் மலையாள சினிமாவை தாண்டி வெளியே வரவில்லை. கடந்த 2024ஆம் ஆண்டில் 'பனி' என்கிற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே ஜெயசங்கர் கரிமுட்டத்தின் நடிப்பில் வெளிவந்தது.

ஆனால், 2025ஆம் ஆண்டை புதிய திரைப்படத்துடன் ஜெயசங்கர் துவங்கி உள்ளார். இவரது குணச்சித்திர நடிப்பில் உருவான 'ரேகாசித்திரம்' என்கிற திரைப்படம் கடந்த ஜனவரி 9இல் திரைக்குவந்தது. இந்த நிலையில்தான், நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம் புதியதாக மஹிந்திரா வாகனம் ஒன்றை வாங்கி உள்ளார்.
இந்த மலையாள நடிகர் வாங்கியிருப்பது, மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் (Thar) ஆகும். ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ தார் வாகனத்தை நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம் டெலிவிரி பெறும் காட்சிகளை சம்பந்தப்பட்ட ஷோரூம் பணியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜெயசங்கர் வாங்கியிருப்பது சில்வர் நிறத்திலான தார் 3-கதவு வாகனம் ஆகும்.
தார் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதனை மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. முன்பு விற்பனையில் இருந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்திற்கு போட்டியாக தார் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. அதன் 2ஆம் தலைமுறை மாடல் தான் 2020இல் அறிமுகம் செய்யப்பட்டது. எந்தவொரு கரடு முரடான பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய இந்த வாகனத்தில் வெறும் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம் வாங்கியிருப்பது 3-கதவுகளை கொண்ட தார் ஆகும். 5 கதவுகளுடனான தார் ராக்ஸ் (ROXX) வாகனத்தை கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில்தான் மஹிந்திரா அறிமுகம் செய்தது. கேரளா போன்ற மலைப்பிரதேச பகுதிகளுக்கு மஹிந்திரா தார் போன்ற வாகனங்கள் மிகவும் ஏற்றவை ஆகும்.


Click it and Unblock the Notifications








