'பீஸ்ட்' படக்குழுவின் மிக முக்கிய நபருக்கு புதிய காரை பரிசளித்த கன்னட நடிகர்... ஓஹோ அதுக்காகதான் குடுத்தாரா?
'பீஸ்ட்' படக்குழுவின் முக்கிய நபருக்கு கன்னட நடிகர் தற்போது புதிய காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கிச்சா சுதீப் (Kiccha Sudeep). இவர் 'நான் ஈ' திரைப்படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதேபோல் தென் இந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஜானி மாஸ்டர் (Jani Master).

இந்த சூழலில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு, மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை, கிச்சா சுதீப் தற்போது பரிசாக வழங்கியுள்ளார். சுதீப் நடித்துள்ள 'விக்ராந்த் ரோனா' (Vikrant Rona) திரைப்படத்தில் ஜானி மாஸ்டரும் பணியாற்றியுள்ளார். இதை முன்னிட்டுதான் ஜானி மாஸ்டருக்கு, மஹிந்திரா தார் காரை கிச்சா சுதீப் தற்போது பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை ஜானி மாஸ்டர் சமூக வலை தளம் மூலமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தள பக்கத்தில் ஜானி மாஸ்டர் கூறியுள்ளது பின்வருமாறு: பரிசு வழங்கியதற்காக கிச்சா சுதீப் சார் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் என்னை கவனித்து கொள்ளும் விதம், ஆசிர்வதிக்கப்பட்டவன் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது.

நான் எப்போதும் உங்களை (கிச்சா சுதீப்) விரும்புவேன் சார். என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு ஜானி மாஸ்டர் கூறியுள்ளார். ஜானி மாஸ்டருக்கு தற்போது மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்கியுள்ள நடிகர் சுதீப்பின் சொந்த மாநிலம் கர்நாடகா ஆகும். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தென் இந்தியா முழுவதும் கிச்சா சுதீப்பிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

மறுபக்கம் கிச்சா சுதீப்பிடம் இருந்து மஹிந்திரா தார் காரை பரிசாக பெற்றுள்ள நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தற்போது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழ் திரைப்படம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். விஜய் (Vijay) நடிப்பில் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ள 'பீஸ்ட்' (Beast) திரைப்படத்தை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

ஆம், பீஸ்ட் திரைப்படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது அவருக்கு பரிசாக கிடைத்துள்ள மஹிந்திரா தார் காரானது, எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தார் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தார் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்ய முடியாமல் மஹிந்திரா நிறுவனம் தடுமாறும் அளவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த காரைதான் பிரதமர் நரேந்திர மோடி கூட சமீபத்தில் ஒரு பேரணியில் பயன்படுத்தினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அந்த பேரணி நடைபெற்றது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் வலம் வந்தார். இதற்காக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தயாரிப்பை பயன்படுத்தியதால்தான், அவருக்கு ஆனந்த் மஹிந்திரா தனது நன்றியை தெரிவித்து கொண்டார். மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய முடியாததற்கு, தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த காரணத்தால் உலகின் பல்வேறு நிறுவனங்களின் கார் உற்பத்தியும் தற்போது கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விளைவாக கார்களின் விற்பனையும் குறைந்துள்ளது. செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த பிரச்னை தொடர்ந்து நீடிக்கலாம் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








