மொதல்ல காருக்கு தேங்க்ஸ் சொல்லுங்க மேடம்... குஷ்பு உயிரை காப்பாற்றிய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி!
பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்ற குஷ்புவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் சிறப்பான கட்டுமான தரத்தால் குஷ்பு காயமின்றி உயிர் பிழைத்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில், நடிகையும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான குஷ்புவின் வீடு அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று காலை சுமார் 8 மணியளவில், கடலூரில் நடைபெறும் பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக, டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியில் குஷ்பு புறப்பட்டார். இந்த டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி அவரது ஆஸ்தான கார் ஆகும்.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு பெரும்பாலும் இந்த டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியைதான் குஷ்பு பயன்படுத்தி வருகிறார். இந்த பிரம்மாண்ட எஸ்யூவியின் முன் இருக்கையில் குஷ்பு கம்பீரமாக அமர்ந்து வருவதை நீங்கள் பலமுறை பார்த்திருக்க கூடும். இந்த வரிசையில் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்கும், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியில் குஷ்பு கம்பீரமாக புறப்பட்டார்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

குஷ்புவின் ஆஸ்தான ஓட்டுனர்தான் காரை இயக்கியுள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் கடுமையாக இருந்ததால், ஆரம்பத்தில் அவர் காரை மெதுவாக ஓட்டியுள்ளார். ஆனால் நகர எல்லையை கடந்ததும் கார் வேகம் பிடிக்க தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் கார் கடலூரை நோக்கி பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரமின்மை காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றை குஷ்பு பயணித்த காரின் ஓட்டுனர் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது இடது பக்கத்தில் இருந்த அந்த கண்டெய்னர் லாரி சற்று வலது பக்கமாக ஏறி வந்து, குஷ்பு பயணித்த காரை உரசியது. ஆனால் கண்டெய்னர் லாரி உரசியவுடன் குஷ்புவின் கார் ஓட்டுனர் சுதாரித்து கொண்டார்.

உடனடியாக அவர் காரை இன்னும் வலது பக்கமாக ஏற்றி விட்டார். இந்த விபத்தில் காரின் பின் பக்க கதவு முற்றிலுமாக நொறுங்கி விட்டது. பின் இருக்கையில் குஷ்புவின் பெண் உதவியாளர் மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி தப்பித்து விட்டனர். அதேநேரத்தில் குஷ்பு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களின்றி உயிர் தப்பி விட்டார். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். விபத்தில் சிக்கிய சூழலிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேறு ஒரு வாகனம் மூலம் குஷ்பு உடனடியாக மீண்டும் கடலூருக்கு புறப்பட்டார்.

குஷ்பு காரின் ஓட்டுனர் அதிவேகத்தில் சென்றது, இந்த விபத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஒரு சில நாடுகளில், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர்களுக்கும் மேற்பட்ட வேகத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சாலைகளில் இப்படிப்பட்ட வேகத்தில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.

உலகிலேயே மிக அபாயகரமான சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் கருதப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சாலைகளில் நடைபெறும் விபத்துக்களில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு அதிவேகம்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. சமீபத்தில் வெளியான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் கூட இதனை உறுதி செய்தன.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு அதிகப்படியான சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு அதிக வேகம்தான் முக்கியமான காரணியாக இருந்தது என்பதை அந்த தரவுகள் எடுத்துக்காட்டின. எனவே அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பாதசாரிகளோ, கால்நடைகளோ அல்லது மற்ற வாகனங்களோ திடீரென உங்கள் வாகனத்தின் குறுக்கே வரலாம். அல்லது மோதலாம். அந்த சமயங்களில் நீங்கள் அதிவேகத்தில் பயணம் செய்தால், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்த விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றியதில் டொயோட்டா பார்ச்சூனர் காரின் பங்கும் முக்கியமானது.

காரின் பின் பக்க கதவு சுக்குநூறாக நொறுங்கி விட்டதை புகைப்படங்களின் மூலம் நம்மால் காண முடிகிறது. அப்படி இருந்தும், பின் பக்கத்தில் அமர்ந்திருந்த பயணிகள் உள்பட அனைவரும் சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர். இதற்கு டொயோட்டா பார்ச்சூனரின் காரின் சிறப்பான கட்டுமான தரமே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

சிறப்பான கட்டுமான தரம் இல்லாத வேறு ஏதாவது ஒரு காராக இருந்திருந்தால், பின் இருக்கை பயணிகளுக்கு பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்க கூடும். பொதுவாகவே டொயோட்டா கார்கள் அனைத்தும் சிறப்பான கட்டுமான தரத்திற்கு பெயர் பெற்றவை. க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களை பற்றி எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

ஆனால் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற கார்கள் மிகவும் உறுதியானவை. சுஸுகி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களைதான் டொயோட்டா நிறுவனம் சிறு சிறு மாற்றங்களுடன் ரீபேட்ஜ் செய்து, முறையே க்ளான்சா, அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
எனினும் டொயோட்டா பார்ச்சூனரை பொறுத்தவரையில் கடுமையான விபத்துக்களையும் தாங்கும் வகையிலான கட்டுமான தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி இதேபோல் கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பல முறை காப்பாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications








