ஹீரோ சீன் எல்லாம் சினிமாலதான்! ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்ற நடிகர் பிரசாத்திற்கு ரூ2000 அபராதம்!
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்த நடிகர் பிரசாந்துக்கு சென்னை பாண்டி பஜார் போலீசார் ரூபாய் 2000 அபராதம் விதித்துள்ளார்கள். யூடியூப் வீடியோவிற்காக பேட்டியளித்துக் கொண்டே பைக் ஓட்டிய நிலையில், இவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பலர் பாராட்டி வருகிறார்கள். இதில் சில விமர்சனங்களும் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஒரு காலத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. இவருக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. தற்போது இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் திரைக்கு வரவில்லை என்றாலும், மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்படியாக அவர் பேட்டி அளிக்கும் போது இவர் காரில் பயணம் செய்து கொண்டே பேட்டியளிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பேட்டிகளை வழங்கி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலில் இவரது பேட்டி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பேட்டியில் இவர் பைக் ஓட்டிக் கொண்டே பேட்டி கொடுப்பது போன்ற காட்சிகள் இருந்தன.
இந்தியா முழுவதும் டூவீலர் ஓட்ட வேண்டும் என்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். டிரைவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டம் இருக்கிறது. இந்த மோட்டார் வாகன சட்டத்தை மீறி நடிகர் பிரசாந்த் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளார்.
இந்த வீடியோவின் படி நடிகர் பிரசாந்த் மட்டுமல்ல அவருடன் பின்னால் அமர்ந்து செல்லும் தொகுப்பாளினியும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலர் சட்டம் எல்லாம் நடிகர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதா என சென்னை போலீஸாரை டாக் செய்து கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். சமூக வலைதளங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சென்னை பெருநகர டிராபிக் போலீஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் சமூக வலைகள் ஐடியில் இருந்து நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதற்காக ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படுகிறது. டூவீலரில் அவரும் அவருடன் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணியவில்லை என்பதால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.
யூடியூபில் வெளியான பேட்டியில் அவர் தனது சிறுவயதில் பைக் ஓட்டிய அனுபவம் குறித்து பேசி இருந்தார். அப்பொழுது அவர் தான் வெறும் 4 நாட்களிலேயே பைக் ஓட்ட பழகி விட்டதாகவும், தனக்கு தனது தந்தை சிறுவயதில் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை வாங்கி கொடுத்ததாகவும், அதைத்தான் ஓட்டி பழகியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வந்து பைக்கை அவரது தந்தை விற்று விட்டதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
சமீப காலமாக ஹெல்மெட் அணியாமல் பலர் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது அதிகமாகிவிட்டது. தற்போது அபராதத்தை பிரசாந்துக்கு விதித்தது போல, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்காசி பகுதியில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பைக் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். அவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என தற்போது சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் யாரும் பயணம் செய்யக் கூடாது. பதிவெண் பெறப்பட்ட டூவீலரில் பயணம் செய்கிறீர்கள் என்றால் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகன டிரைவராக இருந்தாலும் சரி அல்லது பின்னால் அமர்ந்து செல்லும் நபராக இருந்தாலும் சரி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் இந்தியாவில் எங்கு டூவீலர் ஓடினாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கு பாதுகாப்பான விஷயமாக இருக்கிறது. ஹெல்மெட் என்பதை சட்டத்திற்கு அணியாமல், உங்கள் பாதுகாப்பிற்காக அணியும் பட்சத்தில் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல முடியும். ஹெல்மெட்டால் ஏற்படும் பாதிப்புகளை விட பலன்களை அதிகம் என்பதால் எக்காரணத்தை கொண்டும் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








