எடுத்தது இரண்டே 2 படங்கள் தான்... 12 லட்ச ரூபாய் காரை நடிகரே கூப்பிட்டு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்!!
சினிமா (Cinema) திரைத்துறையில் தன்னுடன் பணியாற்றும் முக்கியமான பிரபலங்களுக்கு விலையுயர்ந்த சொகுசு கார்களை ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பரிசளித்து கொள்வது சமீப காலமாக அவ்வப்போது நடக்கக்கூடிய நிகழ்வாக உள்ளது. 'விக்ரம்' (Vikram) திரைப்படம் வெளியான சமயத்திலேயே திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு விலையுயர்ந்த & பிரம்மாண்டமான லெக்ஸஸ் (Lexus) காரை பரிசளித்து இந்த டிரெண்ட்டை துவங்கி வைத்தார். அதன்பின், இந்த டிரெண்ட்டை பலர் பின்பற்ற ஆரம்பித்தனர்.
திரைப்படம் வெற்றி பெற்றதற்காக படத்தின் இயக்குனர் அல்லது தயாரிப்பாளருக்கு அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் விலையுயர்ந்த காரை பரிசளிப்பதையும் அல்லது நடிகருக்கு படத்தின் இயக்குனர் (அ) தயாரிப்பாளர் காரை பரிசளிப்பதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். திரைப்படம் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியை மற்றவர்கள் உடன் பகிர்ந்துக் கொள்ளும் விதமாக இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் விலையுயர்ந்த கார்களை பரிசளித்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா (Actor Suriya) தனக்கு பிடித்த இயக்குனர் குறிப்பிட்ட கார் ஒன்றை வாங்க அலைந்து வருவதை அறிந்து, அவருக்கு அந்த காரை வாங்கிக் கொடுத்து ஆச்சிரியப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில்தான் 'ரெட்ரோ' (Retro) திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில்தான், தமிழ் சினிமாவில் பெரிதும் கவனத்தை பெற்றுவரும் இயக்குனர் ஒருவரின் ஆசையை புதிய கார் ஒன்றின் மூலமாக நடிகர் சூர்யா நிறைவேற்றி உள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் இந்த இயக்குனர் வேறு யாருமில்லை, பிரபலமான '96' திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார் (Prem Kumar) ஆவார்.

ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமான பிரேம் குமார், பசங்க, சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற பிரபலமான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். அதன்பின், இயக்குனர் அவதாரம் எடுத்த பிரேம் குமார் இயக்கிய முதல் திரைப்படமான '96' சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. எந்த அளவிற்கு ஹிட் என்றால், இதே படத்தை தெலுங்கில் 'ஜானு' என்கிற பெயரில் பிரேம் குமார் இயக்கி வெளியிட்டார்.
தமிழில் பிரேம் குமாரின் 2வது திரைப்படமாக திரைக்குவந்த மெய்யழகன் திரைப்படத்திற்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில்தான், இயக்குனர் பிரேம் குமாருக்கு மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம் ஒன்றை வெள்ளை நிறத்தில் வாங்க வேண்டும் என ஆசை தோன்றியுள்ளது. இதற்காக பல ஷோரூம்களில் மற்றும் பலரிடத்தில் வெள்ளை நிறத்திலான தார் வாகனத்தை பிரேம் குமார் தேடியுள்ளார்.
ஆனால், எங்கேயும் அவர் தேடியது போன்றதான வெள்ளை நிறத்திலான தார் வாகனம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், இதுகுறித்து நடிகர் சூர்யா குடும்பத்துடன் நெருக்கமான திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் இதுகுறித்து பிரேம் குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பாளராக இருப்பினும், ஞானவேல் ராஜாவால் கூட பிரேம் குமாருக்கு வெள்ளை நிறத்திலான தார் வாகனத்தை பெற்று கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில், தார் வாகனத்திற்காக வைத்திருந்த பணத்தை பிரேம் குமார் வேறு விஷயத்திற்காக செலவழித்து விட்டார். பின்னர் ஒருநாள் நடிகர் சூர்யாவிடம் இருந்து பிரேம் குமாருக்கு அழைப்பு வந்துள்ளது. நீங்கள் விரும்பியப்படியே வெள்ளை நிறத்தில் மஹிந்திரா தார் வாகனம் ஒன்று கிடைத்திருப்பதாக சூர்யா சார்பில் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால், அதனை வாங்க தற்போது தன்னிடம் பணம் இல்லை என பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு, 'இது உங்களுக்கு விற்பனைக்காக அல்ல, சூர்யாவின் அன்பளிப்பு' என ஞானவேல் ராஜா கூற, பிரேம் குமாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஏனெனில் மஹிந்திரா தார் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.50 லட்சத்தில் இருந்து ரூ.17.60 லட்சம் வரையில் உள்ளன. மஹிந்திரா தார் வாகனத்தின் 3-கதவு வெர்சனை பிரேம் குமாருக்கு நடிகர் சூர்யா பரிசாக வழங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இயக்குனர் பிரேம் குமாரின் மெய்யழகன் திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்தது. அப்போதில் இருந்து இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்துவரும் நிலையில், அதனை வெளிக்காட்டும் வகையில் இந்த பரிசளிப்பு அமைந்துள்ளது. 3 கதவுகளை கொண்ட தார் வாகனத்தின் விலைகளாக மேலே கூறப்பட்டு இருப்பது, எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications








