புதுசா கார் வாங்கி முழுசா 2 வாரம் கூட ஆகல... பிக்பாஸ் வீட்டுக்குள் போய்ட்டு வந்த ராசி அப்படி!!
பிக்பாஸ் பிரபலம் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யார் இந்த பிக்பாஸ் பிரபலம்? எவ்வாறு, எங்கு இந்த விபத்து நடந்தது? இந்த விபத்தின்போது அவர் பயன்படுத்திய கார் என்ன? வாருங்கள் எல்லாவற்றையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிக்பாஸில் கலந்துக் கொண்டாலே புதியதாக கார் வாங்கிவிடலாம் என்கிற அளவிற்கு, சமீப காலமாக நிறைய பிக்பாஸ் பிரபலங்கள் புது கார்களை வாங்கி உள்ளனர். இந்த வரிசையில், கடந்த சில வாரங்களுக்கு முன் புதியதாக கியா செல்டோஸ் காரை வாங்கியவர், காமெடி நடிகர் துகாலி சந்தோஷ் (Tukali Santhosh).

துகாலி சந்தோஷா? இப்படிப்பட்ட பெயரை இதற்குமுன் கேள்விப்பட்டதே கிடையாதே... எந்த பிக்பாஸில் இவர் கலந்துக் கொண்டார்? என நீங்கள் கேட்பது புரிகிறது. துகாலி சந்தோஷ் ஓர் கன்னட பட காமெடி நடிகர் ஆவார். கன்னட மொழியில் வெளியான துகாலி என்கிற படத்தில் காமெடி வேடத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த துகாலி சந்தோஷ் சமீபத்தில் கியா செல்டோஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். இதுகுறித்த செய்தியை அந்த சமயத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம். தனது வாழ்நாள் இலட்சியம் நிறைவேறியுள்ளதாக அந்த சமயத்தில் மகிழ்ச்சியுடன் துவாலி சந்தோஷ் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

ஆனால், புதிய கார் வாங்கி முழுசா இன்னும் 2 வாரங்கள் கூட முடியாத நிலையில், துகாலி சந்தோஷ் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார். மார்ச் 13ஆம் தேதி மாலை நேரத்தில், சாலையில் சென்றுக் கொண்டிருந்த இவரது கியா செல்டோஸ் காரின் மீது சாலையில் சென்ற ஆட்டோ ஒன்று பலமாக மோதியுள்ளது. இந்த மோதலில், ஆட்டோ பலத்த சேதமடைந்ததோடு, ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் தும்குர் மாவட்டத்தில் ஹோன்னேனாஹள்ளி என்கிற பகுதிக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவத்தின்போது, துகாலி சந்தோஷின் கியா செல்டோஸ் காரின் வலது பக்கத்தில் ஆட்டோ மோதியுள்ளது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் ஜெகதீஷ் அவசர சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 14ஆம் தேதி காலையில் சிகிச்சை பலனின்றி ஆட்டோ டிரைவர் ஜெகதீஷின் உயிர் பிரிந்துவிட்டது. இந்த விபத்தில், ஆட்டோ மட்டுமின்றி துகாலி சந்தோஷின் செல்டோஸ் காரும் சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு விதமான கலவையான தகவல்கள் கிடைத்து வருகின்றன. அதாவது, ஒரு தரப்பினர் இந்த விபத்துக்கு காரை ஓட்டிய துகாலி சந்தோஷ் தான் காரணம் எனவும் சம்பவத்தின்போது அவர் மது அருந்தி இருந்ததாகவும் கூறுகின்றனர்.
மறு தரப்பினர், இந்த விபத்துக்கு ஆட்டோ டிரைவர் ஜெகதீஷ் தான் காரணம் எனவும், அவர்தான் மது போதையில் இருந்ததாகவும் கூறுகின்றனர். ஆதலால், இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. போலீஸாரின் விசாரணைக்கு பின்பே முழு விபரம் தெரியவரும். ஆனால், இந்த விபத்துக்கு ஆட்டோ டிரைவரே முழு காரணம் என சம்பவ இடத்தில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், இந்த விபத்தில் அநியாயமாக ஒரு உயிர் பிரிந்துள்ளது. இந்த விபத்திற்கு ஆட்டோ டிரைவர் தான் காரணம் என்றால், காமெடி நடிகர் துகாலி சந்தோஷ் தப்பிக்கலாம். ஆனால், முதற்கட்டமாக விபத்தில் தொடர்புடைய இரு வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









