15 வருஷம் அதற்குள் ஓடி போயிடுச்சு! கணவருடன் ஷில்பா ஷெட்டியின் அமைதியான வாழ்க்கைக்கு இதுதான் சாட்சி!!
என்ன தான் கார், பைக்குகளில் பயணம் செய்தாலும், 3-சக்கர ஆட்டோவில் பயணம் செய்வது என்பதே தனி சுகம் தான். நமக்கு மட்டும்தான் இப்படி உள்ளது என்று பார்த்தால், கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களுக்கு கூட ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்வது பிடித்துள்ளது. இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) திருமண நாளை முன்னிட்டு கணவருடன் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்துள்ளார். வாழ்க்கை துணை உடன் என்றால் எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். பாலிவுட் நடிகையாக இருப்பினும், சில தென்னிந்திய மொழி படங்களிலும் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார். தமிழில் கூட நடிகர் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடிகை கதாபாத்திர வாய்ப்புகள் குறைந்து வந்ததை அடுத்து 2009ஆம் ஆண்டில் தனது 34வது வயதில் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வந்தால் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வயது 50. ஷில்பா ஷெட்டியை காட்டிலும் ராஜ் குந்த்ரா 3 மாதங்கள் சிறியவர். இலண்டனில் பிறந்த பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபரான ராஜ் குந்த்ரா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009இல் இவர்களது திருமணம் முடிவான கையோடு ஐபிஎல்-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் ஜோடியாக இருவரும் முதலீடு செய்தனர்.
அதன்பின், ஐபிஎல்-இல் இருந்து ராஜ் குந்த்ராவுக்கு முழு ஆயுள் தடை விதிக்கப்பட்டது எல்லாம் வேறு கதை. எப்போதும் போல் கணவன், மனைவி இடையே அந்த பாச பிணைப்பு இப்போதும் குறையாமல் உள்ளது. இத்தனைக்கும் இது ராஜ் குந்த்ராவின் 2வது திருமணம் ஆகும். 2009 நவம்பர் 22ஆம் தேதி நடிகை ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா திருமணம் நடந்தது. இந்த நவம்பர் 22இல் 15வது திருமண நாளை இந்த தம்பதி கொண்டாடுகிறது.

இதனை வித்தியாசமான முறையில் இவர்கள் கொண்டாடி உள்ளனர். நேற்று இரவே தம்பதியர் இருவரும் ஜாலியாக, 3-சக்கர ஆட்டோ ரிக்ஷா வாகனத்தில் பயணம் செய்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஷில்பா ஷெட்டி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.
பொதுவாக, ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா போன்ற விஐபி தம்பதிகள் தங்களது திருமண நாளை விலையுயர்ந்த பொருட்கள் உடன் தான் கொண்டாடுவது வழக்கம். விலைமிக்க காஸ்ட்லீயான கார் அல்லது பைக்குகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வர். திருமண நாள் என்று மட்டுமில்லை, பிறந்த நாட்களுக்கு கூட சொகுசு வாகனங்களை பரிசாக ஒருவருக்கு ஒருவர் வழங்கிக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.
பிரபல தமிழ் நடிகர் அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி சமீபத்தில் விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்கியதை தொடர்ந்து, மனைவி ஷாலினிக்கு நடிகர் அஜித்குமார் விலையுயர்ந்த காரை பிறந்த நாள் பரிசாக கடந்த நவம்பர் 20ஆம் தேதி வழங்கினார். அதனை பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். ஆனால், நடிகை ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா தம்பதி எளிமையாக 3-சக்கர ஆட்டோவில் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.
இதுகுறித்த ஷில்பா ஷெட்டியின் இன்ஸ்டா வீடியோவில், அவரது கணவர் ராஜ் குந்த்ரா உணர்ச்சிவச மிகுதியில் பாடல்களை பாடியவாறு பயணம் செய்வதையும், அவரது தோளில் ஷில்பா ஷெட்டி சாய்ந்துக் கொண்டு ராஜ் குந்த்ராவின் பாடல்களை ரசிப்பதையும் பார்க்க முடிகிறது. பின்னர், "பயணம் மகிழ்ச்சியாக இருந்ததா?" என ஷில்பா ஷெட்டி கேட்க, கொஞ்சமும் யோசிக்காமல், "இது அருமை" என ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த பொருட்களுடன் கொண்டாடுவதை காட்டிலும் உண்மையில் இவ்வாறு எளிமையாக கொண்டாடும்போதே ஒருவருக்கு ஒருவர் இடையில் அன்பு இன்னும் நெருக்கமாகிறது. இரவு நேரத்தில், யாரும் இல்லாத சாலையில் எதிர்காற்று மேலே தழுவ பிடித்தவருடன் ஜாலியாக இப்படியொரு ரைடு செல்வதற்கு யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும். ஆதலால், இந்த திருமண நாளை அவ்வளவு எளிதாக இவர்கள் மறக்க மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications








