பெட்ரோல், டீசல் விலை கண்ண கட்டுது... பேசாம த்ரிஷா வழியை நாமலும் ஃபாலோ பண்ணீர வேண்டியதுதான்!
பிரபல நடிகையான த்ரிஷா புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கலால் மற்றும் வாட் வரிகளை மிகவும் அதிகமாக விதித்து வருவதுதான், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு பெரிய அளவில் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

எனவே வீட்டிற்கு அருகில் இருக்கும் மளிகை கடைகளுக்கு செல்வது போன்ற சாதாரண பயன்பாடுகளுக்கு மக்கள் பலர் தற்போது சைக்கிள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அலுவலகம் சென்று வருவதற்கும் கூட பலர் தற்போது சைக்கிளுக்கு மாறி விட்டனர். பெட்ரோல், டீசல் விலை பட்ஜெட்டை பதம் பார்ப்பதுதான் இதற்கு காரணம்.

இந்த சூழலில் பிரபல நடிகையான த்ரிஷா, சைக்கிள் ஓட்டுவதை தற்போது தனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாற்றியுள்ளார். இதற்காக அவர் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சைக்கிளின் புகைப்படத்தை சமூக வலை தளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். சிகப்பு வண்ண சைக்கிளில் அவர் அமர்ந்திருப்பதை நம்மால் அந்த புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.

சைக்கிளை வாங்கிய கடையில் வைத்தே த்ரிஷா இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதை போல் தெரிகிறது. சைக்கிள் ஓட்டிகளுக்கான பிரத்யேக ஹெல்மெட்டையும் த்ரிஷா அணிந்துள்ளார். அந்த ஹெல்மெட்டும் சைக்கிளுக்கு பொருத்தமாக சிகப்பு வண்ணத்தில்தான் இருக்கிறது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக முக கவசத்தையும் த்ரிஷா அணிந்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் விதமாகதான் த்ரிஷா சைக்கிள் வாங்கியிருப்பதாக சமூக வலை தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தான் நல்ல மனநிலையில் இருப்பதை, சைக்கிள் ஓட்டும் இந்த பழக்கம் உறுதி செய்வதாக சமூக வலை தளங்களில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

உண்மையில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நல்லது என்பதுடன், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடுத்தர வர்க்க மக்கள் என்றால் கூடுதலாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்தும் சைக்கிள் ஓட்டும் பழக்கம் பாதுகாப்பு அளிக்கும். அத்துடன் காற்று மாசுபாடு பிரச்னையையும் இதன் மூலம் நாம் குறைக்கலாம்.

எனவே உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது சைக்கிள் பயன்பாட்டை அதிகமாக ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை இந்த விஷயத்தில் டெல்லி அரசு தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் காவல் துறை உயர் அதிகாரிகளான சைலேந்திர பாபு போன்றோர் சைக்கிள் பயன்படுத்துவது தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








