சென்னை- கோவை வெறும் 6 மணி நேரம் தான்! 130 கி.மீ வேகத்தில் சீறி பாயும் புஷ்புல் ரயில் ரெடியாகுது!
இந்தியாவில் ஏழைகளுக்கான அதிவேக ரயிலாக புதிய தொழில்நுட்பத்தில் புஷ் புல் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகள் சென்னை ஐசிஎஃப்-ல் நடைபெற உள்ளது. இந்த ரயில் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
சென்னை ஐசிஎஃப் உலக தரம் வாய்ந்த ரயில்களை தயாரிக்கும் மிக முக்கிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்த டிரெயின்-18 என்ற ரயில் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயிலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் 31க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு ரயிலை தயாரிக்க சுமார் 118 கோடி வரையில் செலவாகிறது. தற்போது இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்தாலும், இந்த வந்தே பாரத் ரயில் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. முக்கியமாக இந்த ரயில்களில் டிக்கெட் விலை எல்லாம் அதிகமாக இருப்பதால் சாதாரண ஏழை மக்களால் இந்த ரயிலை பயன்படுத்த முடியவில்லை என விமர்சனம் செய்கின்றனர்.
வந்தே பாரத் ரயில் முழுவதும் ஏசி பெட்டி ரயில்களாக இருப்பதால் டிக்கெட் கட்டணத்தை குறைப்பதற்கான வழிகளும் இல்லை. இந்நிலையில் வந்தே பாரத்தை விட சிறந்த ஒரு ரயிலை உருவாக்க அதே நேரம் டிக்கெட் கட்டணமும் குறைவாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. அதன்படி புதிதாக புஷ் புல் எனப்படும் புதிய ரக ரயிலை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த புஷ் புல் ரயில்களை தற்போது வெற்றிகரமாக டிசைன் வடிவில் உருவாக்கியுள்ளது. இந்த ரயில்களை சென்னை ஐசிஎஃப் ஆலையில் வைத்து தயாரிக்க முடிவு செய்துள்ளது. வந்தே பாரத் ரயில்களும் இதே ஐசிஎப் ஆலையில் வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த புஷ் புல் ரயிலும் வந்தே பாரத் ரயிலை போல பல்வேறு சொகுசு வசதிகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புஷ் புல் ரயில்களில் எல்எச்பி எனப்படும் குறைந்த எடை கொண்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் , அவசர காலத்தில் ரயில் ஓட்டுநரை தொடர்பு கொள்ளும் டாக் பேக் சிஸ்டம், ஃபயர் அலாரம் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற உள்ளது.
இந்த ரயில் பெட்டியில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் முன்பதிவு உடன் கூடிய ரயில் பெட்டிகள் என அனைத்தும் ஏசி இல்லாத பெட்டிகளாக இணைக்கப்படுகிறது. மேலும் ஏசி பெட்டி என 3 டயர் ஏசி பெட்டியும் இணைக்கப்படுகிறது. மக்கள் இதில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த புஷ்புல் ரயிலில் உள்ள சிறப்பு அம்சமே இதில் பொருத்தப்படும் ரயில் இன்ஜின் தான். இது சித்திரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஆலையில் தயாரிக்கப்படும் ரயில் இன்ஜினை இதில் பொருத்தி இந்த ரயிலை மணிக்கு 130கி.மீ வேகத்தில் பயணிக்கும்படி வடிவமைக்க உள்ளனர். இப்படியாக இந்த ரயில் வடிவமைக்க வந்தே பாரத் ரயிலை விட குறைவான செலவுதான் ஆகும். இதன் பராமரிப்பு செலவும் வந்தே பாரத் ரயிலை ஒப்பிடும்போது குறைவாக தான் இருக்கும்.
இதனால் வந்தே பாரத் ரயிலை விட இந்த புஷ்புல் ரயிலில் டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருக்கும். குறிப்பாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருப்பதால் இந்த ரயிலில் ஏழைகள் முதல் அனைவரும் பயணிக்க முடியும். இந்த ரயில்கள் லோக்கல் பயணிகள் ரயிலுக்கு பதிலாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக 150 முதல் 200 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வகையிலான ரூட்களில் இந்த ரயில்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவை பொருத்தவரை ரயில்வே நெட்வொர்க் உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வோர்காக இருக்கிறது. இந்தியாவில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் தினமும் ஒரு கோடி பேர் பயணிக்கிறார்கள். இதனால் இந்திய ரயில்வேக்கு வருமானமும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக இந்திய ரயில்வே மேம்படுத்த பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. அதில் ஒரு முக்கியமான திட்டம் தான் இந்த புஷ் புல் ரயிலாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாட்டிற்கு பல்வேறு வகையான ரயில்களின்தேவை இருக்கிறது. ரயிலை லோக்கல் பயணம் முதல் நீண்ட தூர பயணம் வரை பல்வேறு விதமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த புஷ் புல் ரயில்கள் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்பலாம்!


Click it and Unblock the Notifications








