இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. மூன்று நாடுகளின் வழியாக இந்த பேருந்து பயணம் மேற்கொள்ளும். பேருந்து பயண ஆர்வலர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை வழங்கவுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து வரும் நவம்பர் 14ம் தேதி இந்த பேருந்து சேவை தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வதற்கு பயணிகளுக்கு தற்போது அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னதாக மியான்மர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வழியே இந்த பேருந்து பயணம் செய்யும். மியான்மரின் காலே மற்றும் யங்கூன், தாய்லாந்தின் பாங்காக் மற்றும் க்ராபி, மலேசியாவின் கோலாலம்பூர் ஆகியவற்றை இந்த பயணத்தின் முக்கியமான நகரங்களாக குறிப்பிடலாம்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா என்ற கட்டங்களாக இந்த பேருந்து சேவை வழங்கப்படும். ஒவ்வொரு கட்டத்திற்கும் 20 இருக்கைகள் கொண்ட பேருந்து மட்டுமே பயன்படுத்தப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவுகள் ஏற்று கொள்ளப்படும்.

இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவு செய்வதற்கு பேருந்து சுமார் 20 நாட்களை எடுத்து கொள்ளும். பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சகல வசதிகளுடன் கூடிய பேருந்து இந்த சேவையில் பயன்படுத்தப்படும் என அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த பேருந்து 5 நாடுகளின் வழியே பயணிக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் பயணிகள் சாலை மார்க்கமாகவே சுமார் 4,500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம். இந்த தொலைவை விமானத்தில் சில மணி நேரங்களில் கடந்து விடலாம் என்றாலும், சாலை மார்க்கமான பயணம் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி.

இதே அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பேருந்து சேவையை வழங்குவது தொடர்பான திட்டத்தை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகின் மிக நீளமான சாலை மார்க்கமான பயணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் பேருந்து சேவையை பயன்படுத்துவதற்கு உலகின் சுமார் 195 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இத்தகைய தொலைதூர பேருந்து பயணங்கள் பயண ஆர்வலர்கள் மிகவும் விரும்பக்கூடியதாக உள்ளன.


Click it and Unblock the Notifications








