இது இந்தியாவுக்கு தாங்க பெருமை... பிரதமர் மோடி கொடியசைக்க, துவங்கியது ஏரோ ஷோ 2023!! நிகழ்ச்சியின் அம்சங்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிக பெரிய விமான சாகச நிகழ்ச்சியான ஏரோ ஷோவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) துவங்கி வைத்துள்ளார். இந்த விமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள நிறுவனங்கள் என்னென்ன? என்பது உள்பட இந்த நிகழ்ச்சி பற்றிய முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஏரோ ஷோவின் 14வது எடிசனாக இந்த நிகழ்ச்சி பெங்களூருவில் மொத்தம் 5 நாட்கள் நடைபெறவுள்ளது. பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே, நாட்டிற்கான கூடுதல் முதலீடுகளை கவர்வதாகும். முன்னதாக இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் உருவாக்கப்படும் கருவிகள் மற்றும் தொழிற்நுட்பங்கள் எவ்வாறு உள்ளன என்பதை வெளிக்காட்டுவதாக ஏரோ ஷோ இருக்கும் என்றார்.

ஏற்கனவே கூறியதுபோல், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கூட்டு உறவுகளை ஏற்படுத்தி கொள்வதை நோக்கமாக கொண்டு நடத்தப்படுகின்ற இந்த விமான சாகச நிகழ்ச்சி ஆனது இந்திய விமான படைக்கான மேம்பாடுகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல் 3 நாட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கானது.
கடைசி 2 நாட்கள், அதாவது பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மட்டுமே பொதுமக்கள் கண்காட்சியை கண்டுக்களிக்க அனுமதிக்கப்படுவர். இந்த விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரிகளுடனான மாநாடு, சிஇஓ-களின் வட்டமேசை மாநாடு, மந்தன் மற்றும் பந்தன் என்ற பெயர்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி, விமான சாகசங்கள், பெரிய அளவில் கண்காட்சி, விமான நிறுவனங்களின் கண்காட்சி உள்ளிட்டவை அடங்கவுள்ளன.

ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
• பெங்களூரில் யெலஹங்கா என்ற பகுதியில் அமைந்துள்ள ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த மொத்தம் 98 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் 32 நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள், 29 நாடுகளின் வான் படையின் முதன்மை அதிகாரிகள் மற்றும் 73 இந்திய & வெளிநாட்டு நிறுவனங்களின் சிஇஓ-கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
• ஏர்பஸ், போயிங், டஸ்ஸால்ட், லாக்ஹெட் மார்டீன், இஸ்ரேல் ஏர்ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரா மோஸ் ஏரோஸ்பேஸ், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் & டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ள நிறுவனங்களாகும்.

• மொத்தமாக ஏறக்குறைய 5 லட்ச பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
• எடை குறைவான காம்பட் விமானம் (LCA)-டெஜாஸ், எச்.டி.டி-40, டோர்னியர் லைட் யூடிலிட்டி ஹெலிகாப்டர் (LUH), லைட் காம்பட் ஹெலிகாப்டர் மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ALH) உள்ளிட்ட ஏற்றுமதி செய்யப்படும் இந்திய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
• பந்தன் நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது மொத்தம் 251 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் தொகை, சுமார் ரூ.75,000 கோடி ஆகும்.


Click it and Unblock the Notifications









