இனி இந்தியர்களுக்கான பாதுகாப்பான கார் எது என்கிற ஆய்வில் ஈடுபடாதாம்.. சோகத்துடன் விடைபெறும் குளோபல் என்சிஏபி!
இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்களை இந்தியாவிலேயே வைத்து தர ஆய்வு செய்யும் விதமாக பாரத் என்சிஏபி (Bharat New Car Assessment Program)-யை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியீடு செய்திருக்கின்றது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், முன்னதாக இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்களை தர ஆய்வு செய்து வந்த குளோபல் என்சிஏபி (Global New Car Assessment Program) விரைவில் இந்தியாவிற்கான தன்னுடைய செயல்பாட்டுக்களை முடிவிற்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இந்தியாவிற்கான பாதுகாப்பான கார் என்கிற திட்டத்தின்கீழ் அது இந்தியாவில் விற்கப்படும் கார்களின் தர மதிப்பை ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையிலேயே வருகின்ற 2023 டிசம்பரில் இருந்து இந்த பிரச்சாரத்திற்கு முடிவுகட்ட இருப்பதாக குளோபல் என்சிஏபி தெரிவித்து இருக்கின்றது. இதுவே, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா பஞ்ச் உள்ளிட்ட கார்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அவை அதிக பாதுகாப்பானவை என்கிற தகவலை இந்த உலகிற்கு வெளிப்படுத்தியது.
இதுமட்டுமில்லைங்க இன்னும் ஏகப்பட்ட இந்தியாவிற்கான கார்களை அது தர ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. எனவே, இந்தியர்கள் பாதுகாப்பான காரை தேர்வு செய்ய உதவியதில் குளோபல் என்சிஏபியின் பங்களிப்பு அளப்பறியாததாக இருக்கின்றது. இந்த பணியில் அது கடந்த 2013 ஆம் ஆண்டிலேயே களமிறங்கியது.

இதுவரை எண்ணற்ற கார்களை அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக இந்த பத்தாண்டு கால வரலாற்றில் சுமார் 50க்கும் மேற்பட்ட கார் மாடல்களை அது ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. இது மோதல் ஆய்வு செய்ததிலேயே மிக சிறந்த மற்றும் அதிக பாதுகாப்பு தர ஸ்டார்களைப் பெற்ற கார்களாக ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ், டைகுன், ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் குஷாக் ஆகியவை இருக்கின்றன.
இந்த நான்கு கார் மாடல்களும் சின்னவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் ஐந்து ஸ்டார்களை பெற்றவை ஆகும்.. இதற்கு அடுத்தபடியாகவே மஹிந்திரா ஸ்கார்பியோ என், டாடா பஞ்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் மாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன.

குளோபல் என்சிஏபி இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்களை மட்டுமே காட்டிக் கொடுக்கவில்லை. அது இந்தியாவில் விற்பனையில் உள்ள துளியளவும் பாதுகாப்பே இல்லாத கார் மாடல்கள் சிலவற்றையும் காட்டிக் கொடுத்திருக்கின்றது. அந்தவகையில், டட்சன் கோ, மாருதி சுஸுகி ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, ஈகோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் உள்ளிட்டவை துளியளவும் பாதுகாப்பு இல்லாத கார்கள் என்பதை அது காட்டிக் கொடுத்திருக்கின்றது.
இந்தியர்களுக்காக செய்து வந்த இந்த பணியையே தற்போது குளோபல் என்சிஏபி கை விட இருக்கின்றது. பாரத் என்சிஏபி அக்டோபர் அறிமுகத்தை முன்னிட்டே இந்த முடிவை அது எட்டி இருக்கின்றது. புதிய பாரத் என்சிஏபிக்கு போட்டி அளிப்பதற்கு பதிலாக, அதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஒத்துழைப்பை வழங்க குளோபல் என்சிஏபி திட்டமிட்டு இருக்கின்றது.

மேலும், பாரத் என்சிஏபி-யின் வருகையை தாங்கள் போட்டியாக பார்க்கவில்லை என்றும் குளோபல் என்சிஏபியைச் சேர்ந்த டேவிட் வார்டு தெரிவித்து இருக்கின்றார். மேலும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தொழில்நுட்பச் செயலகமாகச் செயல்படும் மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனத்துடன் (CIRT), குளோபல் என்சிஏபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையொப்பமிட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது வழக்கமான என்சிஏபி அமைப்புகள் அவைகளுக்கு இடையேயான உறவுகளை பராமரிக்கும் விதமாக போடப்படும் ஒப்பந்தம் ஆகும். இதுதவிர, கடந்த பத்தாண்டு காலமாக இந்திய கார்கள் வாயிலாக கிடைத்த அனுபவங்களை ஓர் ஆசியரைப் போல் இருந்து குளோபல் என்சிஏபி, பாரத் என்சிஏபி-க்கு கற்றுக் கொடுக்கவும் இருக்கின்றது. மேலும், இன்னும் பல பகிர்மானங்கள் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த பாரத் என்சிஏபி அமைப்பு உலகின் 10வது அமைப்பு ஆகும். அதேவேளையில், தங்கள் நாட்டுக்கான கார்களை தாங்களே மோதல் ஆய்விற்கு உட்படுத்திக் கொள்ளும் விதமாக சொந்தமாக என்சிஏபி-யை தொடங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்து உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே குளோபல் என்சிஏபி தன்னுடைய இந்தியாவிற்கான செயல்பாட்டிற்கு முற்று புள்ளியை வைக்கப் போவதாக தெரிவித்து இருக்கின்றது. இப்போதும், நிறுவனம் கை வசம் பத்து இந்திய கார் மாடல்கள் உள்ளன. இவற்றை மோதல் ஆய்விற்கு உட்படுத்திய பின்னர் வேறு எந்த கார்களையும் அது புதிதாக வேறு எந்த இந்திய கார்களையும் சோதனைச் செய்யாது என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









