ஒரு உசுரே போயிருச்சு... இனி இந்த கருவிக்கு இந்தியால இடம் இல்ல... அதிரடி முடிவெடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு
சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கருவிக்கு இந்திய அரசு விரைவில் தடை விதிக்க இருக்கின்றது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மற்றும் இந்த புதிய விதிகுறித்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரியின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கின்றது என்றே கூறலாம். இதற்கு முன்னதாகவும் பல்வேறு வாகன விபத்துகள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அவை அனைத்தைக் காட்டிலும் சைரஸ் மிஸ்த்ரியின் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி வலையில் சிக்க வைத்திருக்கின்றது.

சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்தியது சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காராகும். பொதுவாக சொகுசு கார்கள் என்றாலே எத்தகைய பெரும் விபத்துகளாக இருந்தாலும் அதில் பயணிப்பவர்களைக் கணிசமான காயங்களுடன் பத்திரப்படுத்தும். ஆனால், இந்த விபத்து நிகழ்வில் இருவர் கொள்ளப்பட்டிருக்கின்றனர். சைரஸ் மிஸ்த்ரி மற்றும் அவருடன் பயணித்த நண்பர் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

இத்தனைக்கும் இந்த கார் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்டில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்ற வாகனமாகும். இதனால்தான் அனைவரையும் சைரஸின் விபத்து மரணம் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. குறிப்பாக, இந்த சம்பவம் அனைவருக்கும் ஓர் மிகப் பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கின்றது.

வாகனங்களில் பயணிக்கும்போது அதிக கவனம் தேவை என்பதை இந்த விபத்து நமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, வாகனத்தில் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது, சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு பாடங்களை இந்த நிகழ்வு நமக்கு கற்பத்திருக்கின்றது. ஆமாங்க, அதீத வேகம் மற்றும் இருவரும் சீட் பெல்ட் அணியாததே சைரஸ் மிஸ்த்ரி இறப்பிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

வாகன ஓட்டிகளுக்கு மட்டுமில்லைங்க அரசுக்கும் சைரஸ் விபத்து நிகழ்வு சில பாடங்களைக் கற்று தந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய விதியை நடைமுறைக்குக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் சைரஸ் மிஸ்த்ரியின் விபத்து நிகழ்வு சீட் பெல்ட் சார்ந்திருக்கும் விதிகளை மறுபரீசிலனை செய்ய வழி வகை செய்திருக்கின்றது.

தற்போது, வாகனங்களில் வழங்கப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் சீட் பெல்ட்டும் ஒன்று. இதை வாகன ஓட்டியும், பயணிகளும் அணியவில்லை எனில் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். இந்த ஒலியை ஆஃப் செய்யும் வசதி தற்போது விற்பனையில் உள்ள கார்களில் வழங்கப்படுகின்றன. இந்த வசதிக்கே தடை விதிக்கும் புதிய விதியை மத்திய அரசாங்கம் விரைவில் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அரசு இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய வாகனங்களை அதிக பாதுகாப்பானவையாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள் மற்றும் மும்முனை சீட் பெல்டுகள் உள்லிட்டவற்றைக் கட்டாயமாக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. இந்த சைரஸ் மிஸ்த்ரியின் விபத்து நிகழ்வு சீட் பெல்ட் ரிமைண்டரை அணைத்து வைக்கும் வசதிக்கு தடை விதிக்கக் கூடிய புதிய விதியை உருவாக்க வழிவகை செய்திருக்கின்றது.

இதற்கான அறிவிப்பாணை வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான கார்களில் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் முன் பக்க பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. சில கார்களில் முன் பக்க பயணிகள் சீட் பெல்டை அணியவில்லை இயக்கத்தையே நிறுத்துமளவிற்கு இந்த அம்சம் வழங்கப்படுகின்றது.

ஆனால், பின் பக்க பயணிகளுக்கு இதுமாதிரியான அம்சம் வழங்கப்படுவதில்லை. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் பின் பக்க பயணிகளுக்கு என எந்த எச்சரிக்கை கருவியும் வழங்கப்படவில்லை. ஆகையால், பெரும்பாலான பின் பயணிகள் தங்களுக்கு அதிக பாதுகாப்பு இருப்பதாக நினைத்துக் கொண்டு சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்கின்றனர். இதுமாதிரியான நிலையை போக்கும் புதிய விதியையே அரசு விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கின்றது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications