வாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...
வாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை ஹோண்டா ஷோரூம் ஊழியர் ஒருவர் சுருட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை ஹோண்டா ஷோரூம் ஊழியர் ஒருவர் சுருட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், எமரால்டு ஹோண்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட எமரால்டு ஹோண்டா நிறுவனம், அங்குள்ள ஆஷ்ரம் சாலையில், காந்திகிராம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி கொண்டுள்ளது.

இது ஹோண்டா கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஆகும். இங்கு பிரதீப் மஹேரியா என்ற ஊழியர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அதாவது எமரால்டு ஹோண்டா நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் அவர் இங்கு பணியாற்றி கொண்டிருந்தார்.

சேல்ஸ் மற்றும் சர்வீஸ் ஆகியவற்றின் மூலம் தினசரி திரட்டப்படும் தொகையை, வங்கியில் செலுத்தும் பணியை பிரதீப் மஹேரியா செய்து வந்தார். இந்த சூழலில், 60 லட்ச ரூபாய் பணத்துடன் அவர் தலைமறைவாகி விட்டதாக தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எமரால்டு ஹோண்டா நிறுவனத்தின் கணக்காளர் பங்கஜ் டெய்லர் என்பவர் இந்த புகாரினை அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு (7ம் தேதி) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று எமரால்டு ஹோண்டா ஷோரூமில் 45 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டிருந்தது. இது தவிர பரிமல் கார்டன் பகுதியில் உள்ள ஒரு ஷோரூமில் இருந்து 15 லட்ச ரூபாயை பிரதீப் மெஹரியா வசூலித்திருந்தார். ஆக மொத்தம் 60 லட்ச ரூபாய் வசூலாகியிருந்தது.

வழக்கமாக பிரதீப் மெஹாரியாதான் பணத்தை எல்லாம் வங்கியில் செலுத்துவார். ஆனால் அன்றைய தினம் வசூலான 60 லட்ச ரூபாயை, ஷோரூமின் உரிமையாளர் கனியலால் தாக்கரிடம் ஒப்படைப்பதாக இருந்தது. கனியலால் தாக்கரின் வீடு தல்டேஜ் என்ற பகுதியில் உள்ளது.

எனவே திட்டமிட்டபடி பணத்தை ஒப்படைப்பதற்காக தல்டேஜில் உள்ள கனியலால் தாக்கரின் வீடு நோக்கி பிரதீப் மெஹாரியா சென்று கொண்டிருந்தார். அகமதாபாத் மிரர் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அந்த நிறுவனத்தின் மற்றொரு ஊழியரான ஜெகத் பவ்சார் என்பவரும் உடன் சென்றார்.

ஆனால் செல்லும் வழியில் உள்ள சிஜி ரோடு என்ற இடத்தில், தனக்கு சிறிய வேலை ஒன்று இருப்பதாக பிரதீப் மெஹாரியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே ஜெகத் பவ்சாரை அங்கேயே காத்திருக்கும்படி கூறிய பிரதீப் மெஹாரியா, 5 நிமிடத்தில் வந்து விடுவதாக தெரிவித்து விட்டு சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த தகவல்களை ஜெகத் பவ்சார் வெளியிட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பிரதீப் மெஹாரியா திரும்பி வரவே இல்லை. இதுகுறித்த தகவல் அறிந்த கணக்காளர் பங்கஜ் டெய்லர், பிரதீப் ஹொரியாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதன்பின்தான் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து விட்டு, போலீசில் புகார் அளிக்க பங்கஜ் டெய்லர் முடிவு செய்தார். இதன்படி தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகத் பவ்சாரை காத்திருக்கும்படி கூறி விட்டு சென்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எல்லாம் தற்போது போலீசார் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து பிரதீப் மெஹாரியாவை கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எமரால்டு ஹோண்டா டீலர்ஷிப் தொடங்கப்பட்டது முதல் பிரதீப் மெஹாரியா அங்கு பணியாற்றி வந்தார். மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் என்பதால்தான் அவரிடம் பெரிய தொகையை கொடுப்பதை டீலர்ஷிப் வழக்கமாக வைத்திருந்தது. ஆனால் அவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துள்ளார் பிரதீப் மெஹாரியா.


Click it and Unblock the Notifications