டேக் ஆஃப் ஆகும் போது கழன்று விழுந்த சக்கரம்... விமானியால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!!
இந்தியாவின் தற்போதைய நிலை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனை அனைத்தும் நிரம்பி வழிக்கின்றனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸில், மரத்திற்கடியில் என கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மனதை ரணமாக்கும் வீடியோக்களையும், படங்களையும் பார்த்து வருகின்றோம்.

நிலைமை இப்படியிருக்க, ஒரு நோயாளி, ஒரு மருத்துவர் மற்றும் இரு பணியாளர்கள் உள்பட மொத்தம் 5 பேருடன் புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விபத்துகுக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு அவசரமாக நோயாளி ஒருவருக்காக ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று கடந்த மே 5ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்றுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரா என்பது போன்ற நோயாளி குறித்த விபரமும் கிடைக்க பெறவில்லை.

அந்த நோயாளி உடன் மருத்துவர் ஒருவரும், இரு பணியாளர்களும் அந்த ஏர் ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். ஜெட்ஸெர்வ் ஏவியேஷனின் இந்த ஏர் ஆம்புலன்ஸின் பெயர் சி-90 ஏர் க்ராஃப்ட் விடி-ஜேஐஎல் ஆகும்.
நாக்பூர் விமான நிலையத்தில் ஓடுபாதை எண் 32ல் இருந்து புறப்பட்ட இந்த ஏர் ஆம்புலன்ஸ் டேக் ஆஃப் ஆகும்போது அதன் முன் சக்கரம் திடீரென ஓடுபாதையிலேயே கழன்று விழுந்துவிட்டது.

இதை அறிந்த விமானி உடனே விமானத்தை அவசரமாக மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார். சக்கரங்கள் இல்லாத காரணத்தினால் பெல்லி-லேண்டிங் முறையில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

அதாவது சக்கரங்கள் இன்றி விமானத்தின் உடல் பகுதியை கொண்டு தரையிறக்குவது பெல்லி-லேண்டிங் எனப்படும். இந்த முறையில் தரையிறங்கும் போது விமானம் தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மும்பை விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர்.

விமான ஓடுதளத்தில் முன்னெச்சரிக்கையாக நுரைகள் தெளிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் இத்தகைய நேரங்களில் விமானியின் திறமை தான் மிக முக்கியமாகும். அதற்கு ஏற்ப இந்த ஏர் ஆம்புலன்ஸை இயக்கி வந்த விமானி திறமையாக விமானத்தை தரையிறக்கினார்.

விமானத்தில் இருந்த நோயாளி உள்பட ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சாதுர்யமாக விமானத்தை மும்பையில் தரையிறக்கிய விமானியின் பெயர் கேசரி சிங் என தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அவரை பாராட்டி சிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தின் அட்டவணையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. திட்டமிட்டப்படி விமானங்கள் இயங்கின. ஆனால் சிறிது நேரத்திற்கு மொத்த மும்பை விமான நிலையமே பரபரப்புக்குள்ளாகிவிட்டது.


Click it and Unblock the Notifications








