நூலிழையில் உயிர் தப்பிய 160 பயணிகள்.. திருச்சி விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்...
திருச்சி விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு துபாய் சென்ற விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக ரன் வே அருகே இருந்த பாதுகாப்பு சுவர் மீது மோதியது. இந்த விமானத்தில் பயணித்த 160 பேரும் நூலியழையில் உயிர் தப்பின
திருச்சி விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு துபாய் சென்ற விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக ரன் வே அருகே இருந்த பாதுகாப்பு சுவர் மீது மோதியது. இந்த விமானத்தில் பயணித்த 160 பேரும் நூலியழையில் உயிர் தப்பினர். இது குறித்த விரிவான செய்தியை கிழே பார்க்கலாம்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு ஏர் இந்தியாவின் IX 611 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 160 பயணிகளும், 6 ஊழியர்களும் பயணம் செய்தனர்.

இந்த விமானம் டேக் ஆஃப் செய்த போது இந்த விமானத்தின் வீல்கள் ரன் வே-யை தாண்டி உள்ள பாதுகாப்பு சுவரின் மீது மோதியது. அதில் சுவர் சேதமடைந்தது. சுவர் மீது விமானத்தின் வீல்கள் மோதியது தெரியாமல் விமானத்தை விமானிகள் தொடர்ந்து இயக்கினர்.

ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவலை மற்ற விமான நிலையங்களுக்கும் தெரியப்படுத்தினர். அந்த விமானம் மற்ற விமானங்களின் தொடர்பு எல்லைக்குள் வந்தால், அவர்களை உடனடியாக எமர்ஜென்ஸி லேண்டிங் செய்யுமாறு உத்தரவுகள் அனைத்து விமான நிலையங்களுக்கும் பறந்தது.

இந்த சூழலில் அந்த விமானம் மங்களூரை கடந்த போது மங்களூரு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் கிடைத்தது. உடனடியாக விமான கட்டுப்பாட்டு குழு விமானத்தின் பாதுகாப்பு குறித்தும், விமானத்தில் உள்ள பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் தகவல் கேட்டனர்.

விமானிகளிடம் இருந்து விமானம் பாதுகாப்பாக இருப்பதாகவும், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்ற தகவல் வந்தது. அப்பொழுதும் என்ன நடந்தது என்று விமானிகளுக்கு புரியவில்லை.

உடனடியாக இந்த தகவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளுக்கு சென்றது. இதன் பின் நிம்மதியடைந்த அதிகாரிகள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் எமர்ஜென்ஸி லேண்டிங் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

விமானம் சரியாக 5.39 மணிக்கு மும்பையில் தரையிறங்கியது. உடனடியாக அதில் இருந்த பயணிகள் வேறு ஒரு விமானத்திற்கு மாற்றப்பட்டு அவர்கள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் திருச்சி விமான நிலைய பாதுகாப்பு சுவர் மீது மோதிய வீலை தொழிற்நுட்ப அதிகாரிகள் பார்வையிட்டு அதில் உள்ள குறைகளை நீக்க கோரினர்.

இதற்கிடையில் திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை கேட்டு தமிழக அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.

தற்போது இந்த சம்பவம் குறித்து விமானிகளுக்கு அது ஏன்தெரியாமல் போனது? தெரிந்தும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவில்லையா? இந்த விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








