பயண தேதியை மாற்றுதல், பயணத்தை முழுமையாக ரத்து செய்தலுக்கு கட்டணம் கிடையாது.. ஏர் இந்தியாவின் அதிரடி அறிவிப்பு!
ஏர் இந்தியா டாடாவின் கைகளுக்கு வந்த பின்னருக்கு தனது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், இப்போது பயண தேதியை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் பயணத்தை முழுமையாக ரத்து செய்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நாடு முழுவதும் பனி பொழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக நாட்டின் வடக்கு பகுதியில் எதிரில் வரும் நபர்கள், வாகனங்கள்கூட தெரியாத அளவிற்கு மிகக் கடுமையாக பனி பொழிந்துக் கொண்டு உள்ளது. இந்த நிலை காரணமாக சில முக்கிய விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை குறைக்கும் விதமாகவே ஏர் இந்தியா ஓர் சூப்பரான திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது.

'ஏர் இந்தியா ஃபாக் கேர்' (Fog Care) எனும் திட்டத்தை அது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது திடீரென ரத்து செய்யப்படும் விமான பயணத்தை வேறு நாளுக்கு மாற்றிக் கொள்ள உதவும். இதுமட்டுமின்றி, பயணத்தை முழுமையாக பயணிகள் ரத்தும் செய்து கொள்ளவும் இந்த திட்டம் உதவும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது என ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. கடும் பனிப் பொழிவு காரணமாக பயணிகள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகின்றது.
இந்த நிலையிலேயே தனது பயணிகளுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இச்சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு செல்லும் விமானம் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களுக்காகவே இந்த சிறப்பு திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி கடந்த சனிக்கிழமை அடர்ந்த பனிமூட்டம் சூழ காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அதிக காலை பொழுதில் 100 மீட்டர் இடைவெளியில் இருந்தவற்றை காண்பதே மிக சிரமமாக தென்பட்டது.
இந்த நிலை காரணமாக டெல்லியில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது பயணிகளுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியது. தலை நகர் டெல்லியில் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்றே கடுமையான பனி பொழிவு அன்றைய தினம் தென்பட்டிருக்கின்றது. குறிப்பாக, பஞ்சாப், ராஜஸ்தானின் வடக்கு பகுதியில், ஹரியானாவில் மற்றும் பீஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மிகக் கடுமையான பொழிவு அண்மைக் காலங்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
காலை 8.30 மணி வரையில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவிற்கு அங்கு பனி பொழிவு நிலவுவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே பயணிகளுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக டாடாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் பயண தேதியை மாற்றுதல் மற்றும் பயணத்தை ரத்து செய்தல் போன்றவற்றிற்கு கணிசமான தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றன.
குறிப்பாக, கடைசி நேர ரத்து மற்றும் பயண தேதி மாற்றுதலுக்கு மிகக் கடுமையான அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த நிலையையே டாடாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா வாடிக்கையாளர்களுக்காக மாற்றி அமைத்திருக்கின்றது. கட்டணம் இல்லாமல் பயணத்தை ரத்து செய்தல், பயணத்தை வேறு நாளுக்கு மாற்றிக் கொள்ளுதலை அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு திட்டம் அதீத பனி பொழிவு இருக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், எக்ஸ்பைரி நாள் பற்றிய தகவலை ஏர் இந்தியா நிர்வாகம் அறிவிக்கவில்லை. அதேநேரத்தில், விமானம் ரத்து மற்றும் கால தாமதமாக புறப்படுவது பற்றிய தகவலை ஏர் இந்தியா நிறுவனம் தனது பணிகளுக்கு செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் வாயிலாக தெரிவித்து வருகின்றது. தேவையில்லாமல் விமான நிலையங்களுக்கு வந்து செல்வதை தவிர்ப்பதையும், அதிக நேரம் விமானத்திற்காக காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை அது மேற்கொண்டு வருகின்றது.
68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்தின் கைகளுக்கு கடந்த ஆண்டே ஏர் இந்தியா வந்து சேர்ந்தது. ஏலத்தின் வாயிலாக ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இதனை வாங்கியது டாடா குழுமம். இந்த விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவை வேறு யாருக்கும்/ எந்த நிறுவனத்திற்கும் டாடா நிறுவனத்தால் கை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகே ஓர் இந்தியருக்கோ அல்லது இந்திய நிறுவனத்திற்கு மட்டுமேதான் இதனை விற்க முடியும். இவ்வாறே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








