கிரெடிட் கார்டு விபரங்கள் கசிவு... ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளீர்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க...
ஏர் இந்தியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் விமான சேவை இந்தியா மட்டுமின்றி பெரும்பான்மையான நாடுகளில் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலை இன்னமும் சில நாடுகளில் நிலவி வருகிறது. இந்தியாவை பொறுத்துவரையில் சில விமான சேவை நிறுவனங்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. அவையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே விமான சேவையை வழங்குகின்றன.

அதேபோல் இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், நம் நாட்டில் இருந்து வழக்கமாக செல்லும் விமானங்களுக்கு பெரும்பான்மையான நாடுகள் தடை விதித்துள்ளன. சரி ஏர் இந்தியா விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவில் விமான சேவையை வழங்கும் புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்று ஏர் இந்தியா. நிச்சயம் இந்த விமான சேவையை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். பலர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்திருக்கலாம்.

இத்தகைய பிரபல விமான சேவை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்கர செய்தி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீடா (SITA)வில் இருந்து நமது வாடிக்கையாளர்களை பற்றிய விபரங்கள் கசிந்துள்ளன.

இதில் அவர்களது பெயர்கள், க்ரெடிட் கார்ட் விபரங்கள், செல்போன் எண்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. மேலும் அவை 2011 ஆகஸ்ட் 26ஆம் தேதியில் இருந்து கடந்த 2021 பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களாகும் என அவர்களது தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளது.

சீடா என்பது ஏர் இந்தியா உள்பட உலகின் பல்வேறு விமான சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கிவரும் நிறுவனம் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், உலகின் 90 சதவீத விமான போக்குவரத்து வணிகத்தில் சீடாவின் பங்கும், பணியும் உள்ளது.

இத்தகைய பன்னாட்டு தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் விபரங்கள் கசிந்திருப்பது உண்மையில் மிக பெரிய ஆச்சிரியத்தையும், அதேநேரம் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கான தீர்வை ஏர் இந்தியா வழங்கியுள்ளது.

இதுவரை மொத்தம் சுமார் 45 லட்ச பயணிகளின் தரவுகள் கசிந்துள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்ளாமல் இருக்க, மேற்கூறப்பட்ட காலத்தில் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்தோர் தங்களது க்ரெடிட் கார்ட் உள்பட வங்கி சம்பந்தமான பாஸ்வேர்டுகள் அனைத்தையும் உடனே மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
அதோடு, சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








