பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
ஏர் இந்தியா (Air India) ஏர்லைனின் கடைசி போயிங் 747 (Boeing 747) ரக விமானம் தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரியா விடை பெற்றுள்ளது. ஸ்பெஷலாக பார்க்கும் அளவிற்கு போயிங் 747 விமானத்தில் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது? இத்தகைய விமானத்தின் சேவையை ஏர் இந்தியா ஏன் நிறுத்திக் கொண்டுள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
இன்றைய கால விமான உலகில் இராணியாக கருதப்படுவது போயிங் 747 விமானம் ஆகும். அந்த அளவிற்கு, மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் போயிங் 747 விமானங்களை கடந்த காலங்களில் இருந்து உலகின் பல்வேறு ஏர்லைன் நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளில் பயன்படுத்தி உள்ளன.

இந்தியாவின் ஏர் இந்தியா ஏர்லைன் நிறுவனம் தனது முதல் போயிங் 747 விமானத்தை 1971ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வாங்கியது. அப்போதில் இருந்து இந்த 50 வருடங்களில் ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானங்களில் இந்தியாவின் குடியரசு தலைவர்கள், துணை குடியரசு தலைவர்கள் மற்றும் நாட்டின் பிரதமர்கள் பயணம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாவின் பல கோடிஸ்வரர்களையும் போயிங் 747 விமானங்களில் ஏர் இந்தியா ஏற்றி சென்றுள்ளது.
அதேபோல், இந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு தலைவர்களும் ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானங்களில் பயணம் செய்துள்ளனர். எல்லாவற்றிற்கும் ஆரம்பம் என்ற ஒன்று இருப்பதுபோல், முடிவு என்ற ஒன்றும் இருந்துதானே ஆக வேண்டும். அந்த வகையில், போயிங் 747 விமானங்களை சேவையில் பயன்படுத்துவதை ஏர் இந்தியா படிப்படியாக நிறுத்திக் கொள்ள ஆரம்பித்தது.

ஏர் இந்தியா மட்டுமின்றி, உலகின் மற்ற ஏர்லைன் நிறுவனங்களும் போயிங் 747 விமானங்களை பயன்படுத்துவதை நிறுத்தி கொண்டு வருகின்றன. ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம் கடைசியாக 2021ஆம் ஆண்டில் இயக்கப்பட்டது. அப்போது மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் லேண்ட் செய்யப்பட்ட அந்த கடைசி போயிங் 747 விமானம் கடந்த 3 வருடங்களாக மும்பை விமான நிலையத்தை விட்டு நகரவில்லை.
இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான், இனி அந்த விமானம் இந்தியாவிற்கு வராது. ஏனெனில், அமெரிக்காவில் இந்த விமானம் பாகங்களாக கழற்றப்பட்டு, செயலிழக்க செய்யப்பட உள்ளது. இந்த போயிங் 747 விமானத்தில் இருந்து பெறப்படும் பாகங்களை பின்னர் காலத்தில் புதிய விமானங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படலாம்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம் டேக்-ஆஃப் ஆகி பறந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த வீடியோவில், விமானத்தை விங்-வேவ் செய்தப்படி விமானி கொண்டு செல்வதை காணலாம். அதாவது, விமானத்தின் இறக்கைகளை மேலும், கீழுமாக அசைத்தப்படி டேக்-ஆஃப் செய்து கொண்டு சென்றுள்ளார்.
ஓய்வு பெறும் விமானத்துக்கு இது விமான துறையில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் சம்பிரதாயம் ஆகும். அதேபோல், அமெரிக்காவை சென்றடைந்துள்ள இந்த விமானத்தின் படங்கள் நோமாடிக் அவியேஷன் க்ரூப் என்கிற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவிடம் 4 போயிங் 747 விமானங்கள் இருந்தன. இவை நான்கையும் அமெரிக்காவின் ஏர்சேல் என்கிற நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் விற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போயிங் 747 விமானத்திற்கு மாற்றாக சில விமானங்கள் மார்க்கெட்டில் வந்துவிட்டன. அதாவது, போயிங் 747 விமானத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. போயிங் நிறுவனம் கூட 747 ரக விமானங்களை போன்று புதிய ரக விமானங்களை உற்பத்தி செய்து வருகிறது. அத்தகைய விமானங்களை ஏர் இந்தியா புதியதாக வாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








