உலகின் மிகப்பெரிய ஏ380 பயணிகள் விமானத்திற்கு புத்துயிர் கொடுக்கும் ஏர்பஸ்!
ஏர்பஸ் ஏ380 ப்ளஸ் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன் விபரங்களை காணலாம்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரியது ஏர்பஸ் ஏ380 விமானம். உலகின் மிகப்பெரிய விமானம் என்பதுடன், பல்வேறு சொகுசு வசதிகளையும், சிறப்பம்சங்களையும் இந்த விமானம் பெற்றிருக்கிறது.

அதேநேரத்தில், நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானத்தை இயக்குவதற்கான செலவு மிக அதிகம் இருப்பதால், ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் எதிர்காலம் கேள்விக் குறியானது.

போயிங் 777 விமானத்தைவிட சற்றே கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் பெற்றிருப்பதும், இயக்குதல் செலவு அதிகம் இருப்பதும் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கான பின்னடைவாக இருந்து வருகிறது. ஆர்டர்கள் குறைந்ததால், இந்த விமானத்தின் உற்பத்தியை நிறுத்துவதற்கும் ஏர்பஸ் பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில், பெரும் முதலீடு மற்றும் அதிக எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட ஏ380 விமானத்தை கைவிட ஏர்பஸ் நிறுவனத்துக்கு மனது வரவில்லை. விமான பொறியியலின் உன்னத படைப்பான ஏ380 விமானத்திற்கு புத்துயிர் கொடுக்க ஏர்பஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஏ380 விமான மாடலின் விபரங்களை பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிவித்துள்ளது. ஏ380 ப்ளஸ் என்ற பெயரில் இந்த விமான மாடலை உருவாக்க ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இறக்கையின் இருமுனைகளிலும் விங்லெட் அமைப்பின் நீளம் அதிகரிக்கப்பட இருக்கிறது. மேல்நோக்கிய விங்லெட் 3.5 மீட்டர் நீளமும், கீழ்நோக்கிய விங்லெட் 1.2 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். இதனால், காற்றுடனான உராய்வு வெகுவாக குறைந்து 4 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் பெற முடியும். டர்புலென்ஸ் காரணமாக ஏற்படும் எரிபொருள் இழப்பும் குறையும்.

இதன்மூலமாக, இந்த விமானத்தை இயக்குவதற்கான செலவு 13 சதவீதம் வரை குறையும் என்று ஏர்பஸ் தெரிவித்துள்ளது. எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி, மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் மேம்படுத்த இருக்கிறது ஏர்பஸ்.

இதுதவிர, இரண்டு தளங்களையும் இணைப்பதற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சுருள் வடிவிலான மாடிப்படிகளை சாதாரண படிகள் கொண்ட அமைப்புடன் மாற்றவும் ஏர்பஸ் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, கூடுதலாக 80 இருக்கைகள் கொடுக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, அதிகபட்சமாக 575 பயணிகள் வரை செல்ல முடியும்.

பராமரிப்பு இடைவெளியிலும் மாற்றம் செய்யப்பட இருப்பதால், அதற்கான செலவீனமும் குறையும். இதன்மூலமாக, ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஏர்பஸ் ஏ380ப்ளஸ் விமானம் அதிகபட்சமாக 578 டன் எடையை சுமந்து கொண்டு மேல் எழும்பும் திறனை பெற்றிருக்கும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த விமானம் மிகவும் குறைவான சப்தம் கொண்ட விமானம் என்று பயணிகள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அதனை இந்த புதிய மாடல் மேலும் சிறப்பாக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








