காராகவும், ட்ரோனாகவும் செயல்படும் புதுமையான போக்குவரத்து சாதனம்: ஏர்பஸ் அறிமுகம்!
கார் போலவும், ட்ரோன் போலவும் பயன்படுத்தும் வசதி கொண்ட புதிய பறக்கும் சாதனத்தை ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கார் போலவும், ட்ரோன் போலவும் இயங்கும் புதுமையான போக்குவரத்து சாதனத்தை விமான தயாரிப்பில் புகழ்பெற்ற ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதுமையான பறக்கும் சாதனம் குறித்த விரிவானத் தகவல்கள், படங்களை செய்தியில் காணலாம்.

பாப் அப் என்ற பெயரில் இந்த புதிய பறக்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெருநகரங்களில் டாக்சியாக பயன்படுத்தும் சிறப்பம்சங்களுடன் இதனை உருவாக்கி உள்ளனர். இது மூன்று பிரிவாக இருக்கிறது. கார் சேஸீ போன்ற அடிப்பாகம், பயணிகள் அமர்ந்து செல்லும் கேப்சூல் என்ற அமைப்பு மற்றும் கேப்சூலை தூக்கிச் செல்லும் ட்ரேோன் என மூன்று பிரிவுகளாக இருக்கின்றது.

மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக முன்பதிவு செய்தவுடன், வீட்டிற்கே கார் வந்துவிடும். வழியில் ஏதேனும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால், மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக கட்டளையிட்டால், விசிறிகளுடன் கூடிய ட்ரோன் பறக்கும் சாதனம் பருந்து போல வந்து சாலையில் நிற்கும் கேப்சூலை கவ்விக் கொண்டு செல்லும்.

இதுதவிர, எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்தால், அந்த வழியில் உள்ள போக்குவரத்து நெரிசலை மனதில் வைத்து பறக்கும் வாகனத்தை பயன்படுத்தி செல்லலாமா அல்லது காரிலேயே சென்று விடாலாமா என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துவிடுமாம்.

ஓலோ, உபர் டாக்சியை போன்று மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்வது போல, இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பறக்கும் வாகனம் முழுவதும் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனமாக செயல்படுகிறது. எனவே, வாகன புகையில் மூச்சுத் திணறி வரும் பெரு நகரங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

இந்த வாகனத்தின் அடிப்பாகம் நடுரோட்டில் விட்டுவிட்டு அப்படியே பறந்து போய்விடுகிறோமே என நாம் கவலை கொள்ள தேவையில்லை. இந்த அமைப்பு அனைத்துமே தானியங்கி முறையில் செயல்படக்கூடியவை. எனவே, கேப்சூல் பிரிக்கப்பட்டுவிட்டால், அருகிலுள்ள பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையத்திற்கு சென்று பார்க்கிங் செய்துவிடும்.

ட்ரோன் அமைப்பும் அப்படித்தான். கேப்சூல் பிரிக்கப்பட்டுவிட்டால், பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையத்திற்கு தானாக பறந்து சென்றுவிடும். அதேபோன்று, பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், கார் போன்ற அமைப்பும், ட்ரோன் அமைப்பும் பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையத்திற்கு தானாக சென்றுவிடும்.

கார் போன்ற அமைப்பில் 80 எச்பி திறனை வெளிப்படுத்தக்கூடிய இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. அதிகபட்சமாக 129 கிமீ தூரம் வரை பயணிக்கும். பறக்கும் ட்ரோன் அமைப்பில் 182 எச்பி பவரை அளிக்க வல்ல 4 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 97 கிமீ தூரம் பயணிக்கும். இந்த சாதனங்களை 15 நிமிடங்களில் பேட்டரியை சார்ஜ் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.

இந்த புதுமையான பறக்கும் சாதனத்தை இட்டால்டிசைன் நிறுவனத்துடன் இணைந்து ஏர்பஸ் உருவாக்கி உள்ளது. எதிர்காலத்தில் இந்த டாக்சி சிறப்பான போக்குவரத்து தீர்வாக அமையும் என்று ஏர்பஸ் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
ஏர்பஸ் பாப் அப் சாதனம் செயல்படும் விதத்தை காட்டும் வீடியோவை காணலாம்.
புதிய ஹூண்டாய் சொனாட்டா காரின் படங்கள்!
புதிய ஹூண்டாய் சொனாட்டா காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








