இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தியா!.. டாடா உடன் கை கோர்த்த ஏர்பஸ்.. இந்தியா சீக்கிரமே எங்கேயோ போக போகுது!
விமானம் உற்பத்தி உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் (AirBus), இந்தியாவில் டாடா (Tata)வுடன் இணைந்து வானூர்திகளை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எச்125 வகை ஹெலிகாப்டரையே அது இந்தியாவில் தயாரிக்க இருக்கின்றது. இதற்காகவே டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் (Tata Advanced Systems Limited) உடன் ஏர்பஸ் தற்போது இணைந்து இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் முதல் எச்125 (H125) வகை ஹெலிகாப்டர் 2026 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவின் எட்டு முக்கிய பகுதிகளில் ஹெலிகாப்டர் தயாரிப்பிற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில் ஒரு இடமே தேர்வு செய்யப்பட இருக்கின்றது. ஆண்டுக்கு பத்து யூனிட்டுகள் என்கிற நோக்கிலேயே இந்த ஆலை முதலில் இயங்க உள்ளது.

இதன் பின்னர் ஆண்டுக்கு 50 யூனிட்டுகள் உற்பத்தி என தயாரிப்பை விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தையும் டிஏஎஸ்எல் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் வகுத்திருக்கின்றன. தயாரிப்பு ஆலை அமைய இருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அக்டோபர் மாதத்திற்குள் ஆலை செயல்படத் தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும், ஜனவரிக்குள் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை அமைய இருக்கும் இடமும் உறுதி செய்யப்பட்டு விடும் என கூறப்படுகின்றது. இந்த அளவிற்கே வேகமாக இந்தியாவில் ஹெலிகாப்டரை உற்பத்தி செய்வதற்கான பணியில் இரு நிறுவனங்களும் களமிறங்கி இருக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே 100க்கும் அதிகமான ஏர்பஸ்-இன் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த நிலையிலேயே நிறுவனம் அதன் பெஸ்ட் செல்லிங் ஹெலிகாப்டர் மாடலான எச்125 மாடலை இந்தியாவில் தயாரிக்க இருக்கின்றது. இது ஓர் ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டரில் பைலட்டுடன் சேர்த்து 7 பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து பயணிக்க முடியும்.
இந்த ஹெலிகாப்டரை பலநிலைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்தவகையில், தீயணைப்பான், மீட்பு பணி மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர, சுற்றுலா துறையிலும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களுக்கு நேபாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு மட்டுமே இல்லாமல் ஆசியாவின் பிற நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளில் 500க்கும் அதிகமான எச்125 ஹெலிகாப்டர்களை ஏர்பஸ் நிறுவனம் மேலே பார்த்த நாடுகளுக்கு டெலிவரி கொடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஏற்கனவே இந்தியா வாகன உலகில் ஜாம்பவானாக இருக்கின்ற சூழலில் வானூர்தி உலகிலும் ஜாம்பவானாக்கும் முயற்சியில் டாடாவும், ஏர்பஸ்-ம் களமிறங்கியிருக்கின்றன. இந்த திட்டம் இந்தியாவின் 'ஆத்மநிர்பார் பாரத்' (தன்னம்பிக்கை இந்தியா) திட்டத்துடன் ஒத்துப்போகிறது. உள்நாட்டில் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதன் மூலம், இந்த மேட் இன் இந்தியா ஹெலிகாப்டர்களை வாங்கும் ஆபரேட்டர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும்.
மேலும், மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் இந்த நிலை ஏற்படுத்தக் கூடும் என தெரிகின்றது. குறிப்பாக, விஐபி-க்கள் பலர் இதன் வாயிலாக மிகப் பெரிய பலனை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இந்தியா விமான உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்ட இருப்பதும் இதன் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் ஹெலிகாப்டர் தேவையை உலக நாடுகள் வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவிற்கான ஹெலிகாப்டர் தேவையை இந்தியாவிலேயே பூர்த்தி செய்வதற்கான பணிகள் தற்போது தொடங்கி இருக்கின்றது. விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஹெலிகாப்டர் இந்திய வான்வெளியை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








