இந்த ஆண்டு இறுதியில் பைலட் இல்லா பறக்கும் கார் சோதனை... ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு!
இந்த ஆண்டு இறுதியில் தானியங்கி பறக்கும் காரை சோதனை செய்ய இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் காரை இந்த ஆண்டு இறுதியில் சோதனை செய்ய இருப்பதாக ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாம் என்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து நெரிசலால் திமிலோகப்பட்டு வரும் நகர்ப்புறங்களில் விரைவான போக்குவரத்து வசதியை தருவதற்கான பறக்கும் கார் மாடல்களை பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. இந்த நிலையில், இதற்கு ஒருபடி மேலே போய் பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் கார் மாடலை ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த புதிய பறக்கும் காரை டாக்சியாக பயன்படுத்துவதற்கான நோக்குடன் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. சிட்டி ஏர்பஸ் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய பறக்கும் கார்கள் எதிர்கால போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்பஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் அர்பன் ஏர்மொபிலிட்டி நிறுவனம்தான் இந்த சிட்டி ஏர்பஸ் பறக்கும் டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த பறக்கும் காரின் வடிவமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அடுத்த சில மாதங்களில் முதல் புரோட்டோடைப் மாடல் உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் சோதனை செய்யப்பட உள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் சிட்டி ஏர்பஸ் பறக்கும் கார்கள் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

உபேர், ஓலா கார்களுக்கு முன்பதிவு செய்வது போன்றே, இந்த பறக்கும் கார்களுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாக முன்பதிவு செய்ய முடியும். இதனால், விரைவாக இந்த பறக்கும் டாக்சியின் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

முதல்கட்டமாக பைலட் மூலமாக இயக்கி சோதனை செய்யப்படும். பயன்பாட்டுக்கு வரும்போது பைலட்டுகள் இல்லாமல் தானியங்கி முறையில் பறக்கும் திறன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், தானியங்கி பறக்கும் கார்களுக்கான அனுமதி கிடைக்கும் வரை பைலட்டுகள் மூலமாக இயக்கவும் ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பறக்கும் கார் பேட்டரியில் இயங்கும் என்பதால் சுற்றுச் சூழல் கேடும் தவிர்க்கப்படும். பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த பறக்கும் கார் டாக்சியை உருவாக்கி வருவதாக ஏர்பஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து பல தடங்கல்களையும், சவால்களையும் கடக்க வேண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த புதிய பறக்கும் கார்களை பஸ்களை போன்று குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்குவதற்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் முதல் புரோட்டோடைப் தயாராகிவிடும். 2020ம் ஆண்டு வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய ஏர்பஸ் காலக்கெடு வைத்துள்ளது.
மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய ஆல்பம்!
இந்தியாவின் டக்கார் ராலியாக வர்ணிக்கப்படும் மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளை உங்கள் கண் முன்னே நிறுத்தும் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








