உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் வெற்றிகரமாக பறந்தது...!!
உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலான ஏர் லேண்டர்- 10 முதல்முறையாக வானில் பறந்து தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. வான் போக்குவரத்து துறையில் இந்த ஆகாய கப்பல், புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் பெட்ஃபோர்டுஷயர் பகுதியில் உள்ள கார்டிங்டன் விமான தளத்திலிருந்து முதல் பயணத்தை துவங்கிய ஏர்லேண்டர்- 10 ஆகாய கப்பலை காண்பதற்காக விமான தள வளாகத்தில் கேமராவும் கையுமாக ஏராளமானோர் குவிந்தனர்.

இங்கிலாந்து தயாரிப்பு
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ்[HAV]என்ற நிறுவனம்தான் இந்த ஆகாய கப்பலை உருவாக்கியிருக்கிறது.

ராணுவ பயன்பாடு
இந்த ஆகாய கப்பல் அமெரிக்க ராணுவத்தின் கோரிக்கையை ஏற்று எச்ஏவி நிறுவனம் தயாரித்தது. மீட்புப் பணிகள், உளவு பார்த்தல், ராட்சத ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளில் பயன்படுத்த திட்டமிட்டனர். ஆனால், ராணுவத்திற்கான நிதியை அமெரிக்க அரசு அதிரடியாக குறைத்ததால், இந்த ஆகாய கப்பல் திட்டத்திலிருந்து அமெரிக்க ராணுவம் பின்வாங்கியது.

தளராத முயற்சி
2012ம் ஆண்டு ஆகாய கப்பல் திட்டத்தை அமெரிக்க ராணுவம் முறித்துக் கொண்டதையடுத்து, இந்த ஆகாய கப்பல் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்த எச்ஏவி முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக தற்போது ஏர்லேண்டர் 10 ஆகாய கப்பல் உருவாகியிருக்கிறது.

சோதனை ஓட்டம்
கடந்த 17ந் தேதி முதல்முறையாக ஏர்லேண்டர் 10 முதல்முறையாக தனது பயணத்தை துவங்கியது. 500 அடி உயரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 64 கிமீ வேகத்தில் பறந்தது. மொத்தம் 19 நிமிடங்களே முதல் சோதனை ஓட்டம் நீடித்தது. தொடர்ந்து 200 மணி நேரம் சோதனை செய்யப்பட உள்ளது.

வடிவம்
இந்த ஆகாய கப்பல் 302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரம் கொண்டது. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களைவிட 50 அடி வரை கூடுதல் நீளம் கொண்டது. எனவே, உலகின் மிகப்பெரிய பறக்கும் கலம் என்ற பெருமையே ஏர்லேண்டர் 10 பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த ஆகாய கப்பலுக்கு ஓடுபாதை தேவையில்லை. எனவே, எந்த ஒரு இடத்திலிருந்தும் ராட்சத தளவாடங்களை உலகின் எந்த மூலைக்கும் எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும்.

தொழில்நுட்ப விபரங்கள்
இந்த ஏர்லேண்டர் 10 ஆகாய கப்பலில் தலா 325 குதிரைசக்தி திறன் கொண்ட நான்கு 4.0 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பெரிய விமானங்களில் இருக்கும் ராட்சத திறன் கொண்ட எஞ்சின்களை போலல்லாமல், சாதாரண ஸ்போர்ட்ஸ் கார்களில் பயன்படுத்தப்படும் அளவுக்கு திறன் கொண்ட எஞ்சின்களை வைத்தே இந்த ராட்சத விமானத்தை இயக்க முடியும்.

எரிபொருள் சிக்கனம்
ஹைபிரிட் எனப்படும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்டது. இந்த ஆகாய கப்பல் 60: 40 என்ற விகிதத்தில் ஹீலியம் வாயு மற்றும் டீசலில் பயணிக்கும். விமானங்களை ஒப்பிடும்போது 70 சதவீதம் குறைவான எரிபொருளே தேவைப்படும். இதன் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பும் கூடுதலாக 40 சதவீத எரிபொருள் சிக்கனத்தை தருகிறதாம். சுற்றுச்சூழல் பாதிப்பையும் வெகுவாக தவிர்க்கிறது.

நெடிய பயணம்
இந்த ஆகாய கப்பல் ஆளில்லாத நிலையில் 20 நாட்கள் வரையிலும், ஆள் இருக்கும்போது 5 நாட்கள் வரையிலும் இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது. எனவே, ஆகாய போக்குவரத்தில் இது புரட்சிகரமான சாதனமாக பார்க்கப்படுகிறது.

எடை சுமக்கும் திறன்
20 டன் எடை கொண்ட ஏர்லேண்டர் 10 ஆகாய கப்பல் அதிகபட்சமாக 10 டன் எடையை சுமந்து கொண்டு பறக்கும். இதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட இருக்கும் ஏர்லேண்டர் 50 என்ற மாடல் அதிகபட்சமாக 66 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது.

முக்கிய சிறப்பம்சம்
இந்த ஆகாய கப்பலில் 48 பேர் வரை பயணிக்க முடியும். சப்தம் இல்லாத, புகை இல்லாத பயணத்திற்கு இது உத்தரவாதம் தரும் என்பதே இதன் முக்கிய விசேஷம்.

வேகம் குறைவு
ஓடுபாதை தேவையில்லை, குறைவான எரிபொருள் செலவு உள்ளிட்ட பல சாதகமான அம்சங்களை பெற்றிருந்தாலும் ஒரு சில குறைகள் உள்ளன. அதாவது, இந்த ஆகாய கப்பல் அதிகபட்சமே மணிக்கு 148 கிமீ வேகத்தில்தான் பறக்கும். அதேநேரத்தில், சரக்கு கப்பல்களை ஒப்பிடும்போது இது மிக விரைவான போக்குவரத்து சாதனமாகவே இருக்கும்.

விலை மதிப்பு
இந்த ஏர்லேண்டர் 10 ஆகாய கப்பலை 60 மில்லியன் பவுண்ட் விலை மதிப்பில் உருவாக்கியிருக்கின்றனர். ஆனால், பெரிய விமானங்களை விட இதன் தயாரிப்பு செலவு மிக குறைவானது என்பதும் கவனிக்கத்தக்கது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!


Click it and Unblock the Notifications








