செம ட்ரிக்ஸ்! ஒரு சில பயணிகளை திடீர்னு விமானத்தில் ஏத்த மாட்டாங்க! இது விமான நிறுவனங்களின் வியாபார தந்திரம்!
டிக்கெட் வாங்கியிருந்தாலும், ஒரு சில பயணிகளுக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு ஏன் திடீரென மறுக்கப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், விமானங்களில் பயணம் செய்வது என்பது மிகவும் சிரமமான விஷயங்களில் ஒன்றாகும். அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான், அதன் கஷ்டங்களை பற்றி தெளிவாக தெரியும்.

விமானங்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் முன் கூட்டியே தயார் ஆக வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு சென்று விட வேண்டும். மேலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உங்களால் விமானத்தில் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இதுதவிர விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளும் கடுமையாக இருக்கும்.

இத்தனை பிரச்னைகளையும் தாண்டி ஒரு வழியாக உள்ளே சென்றாலும் கூட, சில சமயங்களில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஏதாவது தவறு செய்து விட்டால், விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு நமக்கு மறுக்கப்படலாம் என நீங்கள் தற்போது நினைக்கலாம்.

ஆனால் எந்த தவறும் செய்யாவிட்டாலும் கூட, நீங்கள் டிக்கெட் எடுத்த விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு உங்களுக்கு திடீரென மறுக்கப்படலாம். ''நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் டிக்கெட் எடுத்துள்ளேன். மேலும் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது நான் இல்லாமல் எப்படி விமானம் செல்ல முடியும்'' என நீங்கள் ஆதங்கப்படுவது புரிகிறது.

இங்கேதான் விமான நிறுவனங்களின் சூட்சமம் மறைந்திருக்கிறது. அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற விமான நிறுவனங்களின் ஆசைதான், உங்களுக்கு விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கடைசி நேரத்தில் மறுக்கப்படுவதற்கான காரணம். விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் விமான நிறுவனங்களின் இந்த சூட்சமத்தை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது.

விமான நிறுவனங்கள் சில சமயங்களில் விமானத்தில் உள்ள இருக்கைகளை காட்டிலும் அதிக டிக்கெட்களை விற்பனை செய்து விடும். உதாரணத்திற்கு ஒரு விமானத்தில் 100 இருக்கைகள் மட்டுமே உள்ளது என வைத்து கொள்வோம். ஆனால் விமான நிறுவனங்கள் 110 டிக்கெட்களை விற்பனை செய்து விடும். இது விமான நிறுவனங்களின் வியாபார தந்திரங்களில் ஒன்று.

ஒருவேளை பயணிகள் யாராவது டிக்கெட்களை திடீரென ரத்து செய்து விட்டால், சில இருக்கைகள் காலியாக இருக்கும். இது விமான நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்கனவே கூடுதலாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் டிக்கெட்கள் மூலம் இந்த நஷ்டத்தை விமான நிறுவனங்கள் ஈடுகட்டி கொள்ளும்.

ஒருவேளை 110 பயணிகளும் வந்து விட்டால் சிக்கல்தான். கூடுதலாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்ட 10 பயணிகளுக்கு சீட்கள் இருக்காது என்பதால், அவர்களுக்கு விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு திடீரென மறுக்கப்பட்டு விடும். இந்த 10 பேரில் நீங்கள் ஒருவராக இருந்து விட்டால், நீங்கள் டிக்கெட் எடுத்த விமானத்திலேயே பயணம் செய்யும் வாய்ப்பை இழப்பீர்கள்.

ஆனால் உங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் செய்து கொடுக்கும் என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். அதாவது வேறு ஒரு விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குவது போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். எனினும் திடீரென விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டால், நாம் அசௌகரியங்களை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக விமான நிறுவனங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டுதான் இருக்கைகளை விட அதிக டிக்கெட்களை விற்பனை செய்கின்றன. உதாரணத்திற்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானங்களில் சராசரியாக 10 பயணிகள் டிக்கெட்களை ரத்து செய்து விடுகின்றனர் என்றால், விமான நிறுவனங்கள் 10 டிக்கெட்களை கூடுதலாக விற்பனை செய்யும்.

எவ்வளவு டிக்கெட்களை கூடுதலாக விற்பனை செய்யலாம் என்ற முடிவை விமான நிறுவனங்கள் எடுப்பதற்கு கடந்த கால தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இந்த கணக்கீடுகள் அனைத்து நேரங்களிலும் சரியாக இருக்காது. ஒரு சில சமயங்களில், இருக்கைகள் இருப்பதை காட்டிலும் அதிக பயணிகள் வந்து விடுவார்கள். அப்போதுதான் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு சில பயணிகளுக்கு மறுக்கப்படும்.


Click it and Unblock the Notifications