விமானம் வெடித்துச் சிதறினாலும், பயணிகளை காப்பதற்கான புதிய தொழில்நுட்பம்!
விமானப் பயணங்கள் எவ்வளவு சுவாரஸ்யம் மிக்கதோ, அந்தளவு ஆபத்தும் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. விமானங்கள் விபத்தில் சிக்கும்போது, கொத்தாக உயிர்கள் பறிபோவது பதற வைப்பதாகவே உள்ளது. கடந்த ஆண்டில் நடந்த விமான விபத்துக்களில் மட்டும் 520 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நடுவானில் விமானங்கள் பறக்கும்போது, தீ மற்றும் தொழில்நுட்பக் கோளாறால் விபத்தில் சிக்கும்போது, அதிலுள்ள பயணிகளை சிறு கீறல் கூட விழாமல், பத்திரமாக காப்பதற்கான புதிய தொழில்நுட்ப மாதிரியை உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானவியல் துறை நிபுணர் உருவாக்கியிருக்கிறார். இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்கள், வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம்.

உக்ரைன் நிபுணர்
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் துறை எஞ்சினியரான விளாடிமி் ததரெங்கோ என்பவர்தான் இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.

அனுபவம்...
அன்டனோவ் ஏஎன்-225 மிரியா என்ற உலகின் மிகப்பெரிய சரக்கு விமான வடிவமைப்பில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது அனுபவத்தை வைத்து, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் இவர் இந்த புதிய விமான பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் மாதிரியை உருவாக்கியிருக்கிறார்.

கேப்சூல்
விமானத்தின் உடல்பகுதியுடன் கேப்சூல் போன்ற கேபினை இணைப்பதுதான் இந்த தொழில்நுட்பத்தின் மேலோட்டமான தகவல். அதாவது, கேபினில் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் ஏற்றிய பின்னர், அது தனியாக விமானத்துடன் இணைக்கப்படும்.

அவசர காலத்தில்...
விமானத்தில் தீ அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் சமயங்களில், ஒரு பொத்தானை தட்டினால், கேபின் மட்டும் தனியாக கழன்றுவிடும். அச்சச்சோ என்று பதறுகிறீர்களா? பயப்பட வேண்டாம்.

பாரசூட் உதவி
கேபின் தனியாக கழன்ற நொடியிலேயே, அதனை ராட்சத பாரசூட்டுகள் தாங்கிப் பிடித்து மெது மெதுவாக கீழே இறக்கும். இறங்குற இடம் தரையா இருந்தா பரவாயில்லை, ஆறு, குளம், ஏரி, கடலா இருந்தா என்ன பண்றது அப்படி கேள்வி எழுவது நியாயம்தானே!

மிதவை வசதி
நீர் நிலைகளில் இறங்கும்போது மிதவை அமைப்பு விரிவடைந்து கேபின் தண்ணீரில் மிதக்கும். மேலும், பாரசூட்டுகளில் இருக்கும் பிராக்ஸிமிட்டி சென்சார்கள், மற்றும் பாரசூட்டில் இருக்கும் ராக்கெட் எஞ்சின்கள் தரையை நெருங்கும் வேளையில், கேபினை மெது மெதுவாக பத்திரமாக கீழே தரையிறக்கிவிடும்.

எவ்வளவு நேரம் பிடிக்கும்?
விமானத்தில் தீப்பிடித்தது தெரிய வந்தாலோ அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கும் சமயத்தில், வெறும் 3 வினாடிகளில் கேபினை தனியாக கழற்றிவிட முடியும்.

விமான வகை
இந்த தொழில்நுட்ப மாதிரி, சிறிய மற்றும் நடுத்தர வகை விமானங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று விளாடிமிர் தெரிவிக்கிறார்.

குறைகள்
இது தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் விமானங்களில் பரிசோதிக்க இயலாது என்றும், இதற்காக புத்தம் புதிதாக விமானங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கார்பன் ஃபைபர் பாகங்களால் கேபின் கட்டமைக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

காஸ்ட்லி திட்டம்
இந்த திட்டம் இன்டர்நெட்டில் வைரலாக பரவிய போதிலும், இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று விமானவியல் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், கட்டுமான செலவு மிக அதிகமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பல திட்டங்கள்
இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் இல்லை என்றும், ஏற்கனவே பலர் இந்த கான்செப்ட்டை கொண்டு விமான மாதிரிகளை வடிவமைத்திருப்பதாகவும், விமானத்தின் கேப்சூலை தயாரிப்பதற்கான கலப்பு உலோகம் பற்றி மாறுபட்ட கருத்துக்களும், நடைமுறை சிக்கல்களும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடியோ
வீடியோவை இங்கு காணலாம்

மோட்டார் உலகச் செய்திகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பிலிருங்கள்.
ஃபேஸ்புக் பக்கம்
டுவிட்டர் பக்கம்


Click it and Unblock the Notifications








