உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய விமான நிறுவனம்! ஒட்டுமொத்த தேசமும் இதுக்காக பெருமைப்படணும்!
இந்தியாவின் விமான போக்குவரத்து துறையில் புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள நிறுவனம் ஆகாசா ஏர் (Akasa Air). கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதிதான், ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. ஆகாசா ஏர் 2வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது.
ஆம், ஆகாசா ஏர் நிறுவனம் தனது 20வது விமானத்தை வாங்கியுள்ளது. இதில், 2 விஷயங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஆகாசா ஏர் நிறுவனத்தில், 20வது விமானமாக இணைந்திருப்பது போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 MAX) விமானத்தின் 737-8-200 வேரியண்ட் ஆகும். இதன் மூலமாக ஆசிய கண்டத்தில் இந்த விமானத்தை வாங்கிய முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை ஆகாசா ஏர் தன்வசமாக்கியுள்ளது.

அத்துடன் தனது 20வது விமானம் மூலமாக, சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை வழங்கும் தகுதியையும் ஆகாசா ஏர் பெற்றுள்ளது. அதாவது இந்திய சட்டதிட்டங்களின்படி, ஒரு விமான நிறுவனம் வெளிநாடுகளுக்கு விமான சேவையை வழங்க வேண்டுமென்றால், அதனிடம் குறைந்தபட்சம் 20 விமானங்கள் இருக்க வேண்டும்.
அந்த தகுதியை ஆகாசா ஏர் நிறுவனம் தற்போது எட்டியுள்ளது. எனவே அந்நிறுவனத்தால் இனி வெளிநாடுகளுக்கும் விமான சேவையை விரிவுபடுத்த முடியும். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வைத்து, ஆகாசா ஏர் நிறுவனத்திடம் புதிய விமானம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று (ஆகஸ்ட் 1) பெங்களூர் நகரை வந்தடைந்தது.

இதுகுறித்து ஆகாசா ஏர் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான வினய் துபே கூறுகையில், ''வெறும் 12 மாதங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 20 விமானங்களை கொண்ட நிறுவனமான ஆகாசா ஏர் வளர்ந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது நமது நாடே பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்'' என்றார்.
ஆகாசா ஏர் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் புதுவரவான போயிங் 737-8-200 விமானம் ஆகாசா ஏர் நிறுவனத்திற்கு லாபத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கும் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க இது ஆகாசா ஏர் நிறுவனத்தை அனுமதிக்கும்.
வெளிநாடுகளுக்கு விமான சேவையை வழங்கும் தகுதியை பெற்றுள்ளதால், நடப்பு 2023-24ம் நிதியாண்டு முடிவடைவதற்குள், 800 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த ஆகாசா ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்களை இயக்க ஆகாசா ஏர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
போயிங் 737-8-200 விமானத்தை இயக்கும் ஆசியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ள அதே நேரத்தில், உலக அளவில் நான்காவது நிறுவனம் என்ற சாதனையையும் ஆகாசா ஏர் படைக்கவுள்ளது. இதற்கு முன்பாக ரியான் ஏர் (Ryanair), பஸ் (Buzz) மற்றும் மால்டா ஏர் (Malta Air) ஆகிய நிறுவனங்கள் இந்த விமானத்தை இயக்கி கொண்டுள்ளன.
இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பஸ் மற்றும் மால்டா ஏர் ஆகிய 2 நிறுவனங்களும் ரியான் ஏர் நிறுவனத்துடன் தொடர்புடையவை ஆகும். அதாவது ரியான் ஏர் நிறுவனம்தான், இந்த 2 நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனமாக உள்ளது. எனவே உலக அளவில் ரியான் ஏர் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக போயிங் 737-8-200 விமானத்தை இயக்கும் நிறுவனம் என்றும் கூட ஆகாசா ஏர் நிறுவனத்தை குறிப்பிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆகாசா ஏர் நிறுவனம் வாங்கியுள்ள புதிய போயிங் 737-8-200 விமானம், எரிபொருள் சிக்கனத்தில் தலைசிறந்து விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான எரிபொருளை பயன்படுத்தும் அதே நேரத்தில், கார்பன் உமிழ்வையும் இந்த விமானம் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெரும் தலைவலியாக இருக்கும் சத்தமும் கூட இந்த விமானத்தில் குறைவுதான் என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








