தொப்பி, மாஸ்க்லாம் போட்டு மொகத்தை மறச்சாலும் மக்கள் கண்டுபிடிச்சுட்டாங்க! மனுஷன் தர லோக்கலா எறங்கீட்டாரு!
இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வேகமாக உயர்ந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக பெரு நகரங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.
குறிப்பாக மும்பை மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில், போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் பொதுமக்கள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டுள்ளனர்.

இதற்கு பாலிவுட் நடிகர் அக்ஸய் குமார் (Akshay Kumar) ஒரு உதாரணம். மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் அக்ஸய் குமார், விலை உயர்ந்த கார்கள் பலவற்றை சொந்தமாக வைத்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes Benz V-Class), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350 (Mercedes Benz GL350), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) என ஏராளமான சொகுசு கார்களை அக்ஸய் குமார் வைத்துள்ளார்.
இவை மட்டுமல்லாது, போர்ஷே கேயென்னே (Porsche Cayenne), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VII (Rolls Royce Phantom VII) ஆகிய கார்களும் கூட, அக்ஸய் குமாரிடம் உள்ளன. ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த கார்கள் உள்ள போதிலும் கூட, அக்ஸய் குமார் தற்போது மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. மும்பை பெரு நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதன் காரணமாகவே, அக்ஸய் குமார் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். சாலை மார்க்கமாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட, மெட்ரோ ரயில் வேகமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அக்ஸய் குமாரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது மற்றும் புத்திசாலித்தனமானது. இது பொதுமக்கள் மத்தியில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் என நாங்கள் நம்புகிறோம். உண்மையில் மக்கள் சொந்த வாகனங்களை தவிர்த்து விட்டு, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய முன்வந்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறையும்.
இதன் காரணமாகவே அரசு பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை ஊக்குவித்து வருகிறது. ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பலரும் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், சில சமயங்களில் 7 பேர் பயணம் செய்ய கூடிய கார்களில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்கிறார்.
இது போன்ற செயல்கள் நிச்சயமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை அதிகரிக்கும். இப்படிப்பட்ட ஒரு சூழலில் அக்ஸய் குமார் போன்ற பிரபலங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பொது போக்குவரத்து வாகனங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








